திங்கள், 17 ஜூன், 2019

திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை : திமுக- காங்கிரஸ் இழுபறி! களமிறங்கிய எடப்பாடிமின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் தொடர்பில் இருந்தது. கொஞ்ச நேரத்தில் மெசேஜ் வந்தது.
“தமிழகத்தில் தென்மாவட்டத்தில் நாங்குநேரி, வட மாவட்டத்தில் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலாளர் அறிவித்துவிட்டார். எனவே இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருப்பது உறுதியாகிவிட்டது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில் இவ்விரு தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து, வேலூருக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றுவிட்டதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி சட்டமன்ற திமுக உறுப்பினர் ராதாமணி உடல் நலக் குறைவால் ஜூன் 14ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனால் இரு தொகுதிகளும் காலியாகியிருக்கின்றன.
இந்நிலையில் டெல்லி செல்வதற்கு முன்னதாகவே நாங்குநேரி தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் யார் என்பது பற்றிய ஆலோசனையில் இறங்கிவிட்டார் எடப்பாடி. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஜெயித்த நாங்குநேரி தொகுதியையும், திமுகவே வைத்திருந்த விக்கிரவாண்டி தொகுதியையும் இடைத்தேர்தல் மூலம் அதிமுக கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் இப்போதைய திட்டம். டெல்லி சென்று வந்த பின்னரும் இதுபற்றிய ஆலோசனைகளில் தீவிரமாகிவிட்டார்.
’ நம்ம பலம் இப்ப இருக்கிற எம்.எல்.ஏ.க்களை விட இன்னும் இரண்டு அதிகரிச்சால் ஆட்சிக்கும் பாதுகாப்பு. இடைத்தேர்தல் மூலம் மக்களோட நம்பிக்கையை பெற்றது மாதிரியும் ஆகும். அதனால எக்காரணத்தை முன்னிட்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில அதிமுக ஜெயிக்கணும். அதுக்காக இப்பவே வேலைகளை ஆரம்பிங்க’ என்று தனது நம்பகமான தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்களைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி.
ஒருபடி மேலேபோய் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனையும் நடக்க ஆரம்பித்துவிட்டது. நாங்குநேரி தொகுதியில் நாடார் சமூகத்தினர் அதிகமுள்ளனர். அதுவும் குறிப்பாக அய்யாவழி எனப்படும் சாமித் தோப்பு வைகுண்டரின் வழியை பின்பற்றுபவர்கள் அடர்த்தியாக உள்ளனர். அந்த வகையில் அய்யாவழியை பின்பற்றி வரும் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு இயக்குனரான நாஞ்சில் அன்பழகன் எடப்பாடியிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளார். அவரது குடும்பத்துக்கும் அய்யாவழி நிர்வாகிகளின் குடும்பத்துக்கும் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் தொகுதியில் நன்கு அறிமுகம் பெற்றவர் என்ற முறையில் வாய்ப்பு கேட்டிருக்கிறார் நாஞ்சில் அன்பழகன். நாங்குநேரி தொகுதியில் நிற்பது பற்றி அன்பழகனிடம் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இதுவரை சில சுற்றுகள் பேசியிருக்கிறார்கள். லோக்கல் புள்ளிகள் சிலரும் போட்டியிட ஆர்வமாக இருக்கும் நிலையில் நாஞ்சில் அன்பழகன் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.
நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது, ‘நாங்குநேரி காங்கிரஸின் தொகுதி. இரண்டு முறை அங்கு நான் வெற்றிபெற்றுள்ளேன். . காங்கிரஸ் தொகுதி என்பதால் நாங்கள் போட்டியிடுவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம். நான் சுட்டிக்காட்டும் நபரை வெற்றிபெறவைக்க மக்கள் உதவுவார்கள் ’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நாங்குநேரி தொகுதியை திமுகவிடம் கொடுக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் உதயநிதி பகிரங்கமாக திருநாவுக்கரசரைப் பார்த்து வேண்டுகோள் வைத்தார். அப்போது மேடையில் இருந்த ஸ்டாலினும் இதுபற்றி தன் நிறைவுரையில் குறிப்பிடவில்லை. உதயநிதியின் இந்த கருத்து பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ‘நாங்குநேரி தொகுதியை திமுகவுக்கு விட்டுத் தர வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார். திருநாவுக்கரசர் கோபித்துக்கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அதனை அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர இரு கட்சிகளுக்கு இடையே நடந்த உரையாடலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வராது. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டுமோ அதனை முறையாக பங்கிட்டுக் கொள்வோம்’ என்று பதிலளித்தார்.
ஆனால் உதயநிதியின் கோரிக்கையைக் கொண்டாடும் தென் மாவட்ட திமுகவினர் இம்முறை நாங்குநேரியில் திமுகவே நிற்க வேண்டும் என்று தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், ராதாபுரம் தொகுதியில் கடந்த முறை சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த அப்பாவு நாங்குநேரி தொகுதியைக் குறிவைத்து காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார். காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸும் நாங்குநேரியைக் கேட்டுப் போராடி வருகிறார்.
இந்தத் தகவல்கள் எல்லாம் எடப்பாடிக்குக் கிடைக்க, ‘நாங்குநேரியில் சீட் யாருக்கு என்பதிலேயே திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சு. அதனால இப்பவே நாம் அத்தொகுதியில் கவனம் செலுத்தத் தொடங்குவோம். ஈசியா ஜெயிச்சுடலாம்’ என்று உத்தரவிட்டிருக்கிறார். இதேபோல விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் தேர்வுப் பணிகளும் தொடங்கிவிட்டன என்கிறார்கள். இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் ஆட்சி நிலைப்பது மட்டுமல்ல, அதிமுகவில் தனது தலைமைக்கும் மதிப்பு கூடும் என்று இரு வித கணக்குகளைப் போட்டுக் களமிறங்கிவிட்டார் எடப்பாடி” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: