புதன், 22 மே, 2019

பொருளாதார அடிப்படையிலும் பார்பனர்களே முதலிடத்தில் ..எகனாமிக் டைம்ஸ் எச்சரிக்கை

கவிஞர் கலி. பூங்குன்றன்  : "பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் ."
பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் கொண்டிருக்கும் காரணத்தால் ஒரு தவறான கருத்தைப் பரப்பி வைத்துள்ளனர்.
அய்யோ பாவம் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் சர்வராக வேலை பார்க்கிறார்கள். இடஒதுக்கீடு இருப்பதால் அவர் களுக்குப் படிக்கவும், வேலைக்கு போகவும் வாய்ப்பு இல்லாமல் சதி செய்யப்பட்டு விட்டது என்று உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகிறார்கள். பார்ப்பனர் அல்லாதாரும் இந்த மாயச் சுழலில் சிக்கி தாளம் போடுகிறார்கள்.
இந்தப் பொய்த்திரையை கிழிக்கும் வகையில்தான் "எகனாமிக் டைம்ஸ்" ஏடு (2019 மே 12 - 19) ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விவரங்களைத் தந்துள்ளது.
பணக்காரர்கள் என்று வரும் பொழுது பார்ப்பனர்கள் 49.9 விழுக்காடாகும். பிற்படுத்தப்பட்டோர் 15.8 விழுக் காடாகும். தாழ்த்தப்பட்டோர் 9.5 விழுக்காடாகும்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க பார்ப்பனர் எல்லாம் பரம ஏழைகள் போல பம்மாத்து பிரச்சாரம் நியாயம்தானா? இதனை நம்பும் பார்ப்பனரல்லாத மக்களின் மனநிலையை என்னவென்று சொல்லுவது!
ஏழை என்று எடுத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் 4.6 விழுக்காடுதான், பிற்படுத்தப்பட்டோரில் ஏழைகள் 18.9 விழுக் காட்டினர் ஆவர். பிற்படுத்தப்பட்டோரில் பார்ப்பனர் களை விட ஏழைகள் அதிகம் என்பதை கவனிக்க வேண்டும். அதே போலவே தாழ்த்தப்பட்டவர்களில் ஏழைகள் 28.4 விழுக்காடாகும். இவர்களில் பணக்கார்கள் 9.5 விழுக்காடே!

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன? ஏழ்மைக்கும், ஜாதிக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளலாம்.
அதே போல பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருப்பதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ளலாம். உத்தியோக நிலைமையை எடுத்துக் கொண்டால் கேட்கவே வேண்டாம்.
எஸ்.சி. எஸ்.டி மற்றும் ஓபிசி அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்த இடங்களைக் காண்க:
1. குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்த இடுகைகள்- 49 இவர்களில் 39 பார்ப்பனர்கள் SC, ST - 4 OBC - 6
2. குடியரசு துணைத் தலைவர் செயலகத்தின் பதவிகள் 7 இங்கே 7 பதவியிலும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். SC-0 ST- 0 OBC - 0
3. கேபினட் செயலாளர் பதவிகள் 20 பார்ப்பனர்கள்- 17 SC, ST-1 OBC - 2
4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் பார்ப்பனர்கள் - 31 - SC, ST - 2 OBC - 2
5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் 274 பார்ப்பனர்கள் - 259 SC, ST - 5 OBC - 10
6. பாதுகாப்பு அமைச்சகம் 1379 பார்ப்பனர்கள் - 1300 SC, ST - 48 OBC - 31
7. சமுக நல மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 209 பார்ப்பனர்கள் - 132 SC, ST - 17 OBC - 60
8. நிதி அமைச்சின் மொத்த இடுகைகள் 1008 பார்ப்பனர்கள் - 942 SC, ST - 20 OBC - 46
9. பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 409 பதவிகள் பார்ப்பனர்கள் - 327 SC, ST - 19 OBC - 63
10. தொழில் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 74 பார்ப்பனர்கள் - 59 SC, ST- 4 - OBC - 9
11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121 பார்ப்பனர்கள் -SC, ST-0 OBC- 22
12. ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் 27, ஒட்டுமொத்தம் பார்ப்பனர்கள் - 25 SC, ST- 0 OBC - 2
13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140 பதவி. பார்ப்பனர்கள் - 140 SC, ST - 0 OBC - 0
14. மத்திய அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் 108 பதவி. பார்ப்பனர்கள் - 100 SC, ST- 3 OBC - 5
15. மத்திய செயலாளர் பதவிகள் 26 பார்ப்பனர்கள் - 18 SC, ST - 1 OBC -7
16. உயர்நீதிமன்ற நீதிபதி 330 பதவி. பார்ப்பனர்கள் - 306 SC, ST - 4 OBC - 20
17. உச்சநீதிமன்ற நீதிபதி 26 பதவி. பார்ப்பனர்கள் - 23 SC, ST-1 OBC - 2
18. மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரி 3600 பதவி. பார்ப்பனர்கள் - 2750 SC, ST - 300 OBC - 350
(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட , 'யங் இந்தியா' எனப்படும் நிறுவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டில் கிடைத்த தகவல்)
இப்படி எல்லா நிலைகளிலும் வலுவாக வளமாக இருக்கும் பார்ப்பனர்கள் எல்லாம் ஏதோ பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று கூறி, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்காக பாரதீய ஜனதா என்ற பார்ப்பன ஜனதா அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தமிழ்நாடு அரசு - அரசனை மிஞ்சிய விசுவாசியாக இதனைச் செயல்படுத்த முண்டா தட்டி எழுகிறது.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் திராவிட இயக்கம் - வேரூன்றிய மண்ணில், திராவிட என்ற பெயரையும், அண்ணா பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுக ஆட்சி, இடஒதுக்கீட்டில் பார்ப்பனத் தன்மையோடு செயல்படுவது மன்னிக்கவே முடியாத வெட்கக் கேடாகும். 'பலனை' வட்டியும் முதலுமாக அஇஅதிமுக அரசு சந்திக்க நேரும் என்று எச்சரிக்கிறோம்.
கவிஞர் கலி. பூங்குன்றன்

கருத்துகள் இல்லை: