திங்கள், 20 மே, 2019

"வட சென்னைக்காரி" ஒவ்வொரு சொல்லிலும் தெரிவது அளப்பரிய அன்பு, அசாத்தியமான தன்னம்பிக்கை...,..

Ashok Samrat : "வடசென்னைக்காரி"
கடந்த புத்தக சந்தையில் வாங்கினேன். அவ்வப்போது ஓரிரு கட்டுரைகள் மட்டுமே வாசிப்பது, பின்பு புத்தகத்தை மூடி வைத்து விடுவதுமாக இருந்தேன்.
தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று கட்டுரைகள் வாசித்தால் கூட மனதில் தாங்கொணாத ஒரு பாரம் உருவானது....
நூலாசிரியர் வெறும் 35 வயதுக்காரர். ஆனால் 300 வருட சென்னையின் வரலாற்றை மூன்று பக்கங்களில் எழுதி முடிக்கிறார். நமக்கு துக்கத்தில் மூச்சடைத்துப் போகிறது.
பொது சமூகம் என்று அறியப்படுபவர்கள் எந்த மக்களை கீழ்த்தரமாக நினைக்கிறார்களோ, அந்த மக்கள் வாழ்வை எப்படி கொண்டாடுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார். அந்த மக்களில் ஒருவனாக நான் எனது வாழ்வை எவ்வளவு கொண்டாட்டமாக வாழ்கிறேன் என்பதை ஷாலின் மரியா லாரன்ஸின் எழுத்துக்களின் வழியே மீண்டும் ஒருமுறை கண்டுணர்கிறேன்.
நூலின் ஒவ்வொரு சொல்லிலும் தெரிவது அளப்பரிய அன்பு, அசாத்தியமான தன்னம்பிக்கை, வாழ்வை அதன் போக்கில் வாழும் துணிவு, அடுத்தவர் அபிப்பிராயம் பற்றிய அலட்சியம், தன்முனைப்பு, இந்த உலக மக்கள் மீதான பேரன்பு.

போலவே, வரலாற்றில் மறைக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப் பட்டிருந்த ஆளுமைகளை தேடித் தேடி வாசித்து அவர்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். வரலாற்று நாயகர்களை இருட்டடிப்பு செய்வதன் பின்னிருக்கும் சூழ்ச்சியை நமக்கு புரிய வைக்கிறார்.
இருபது வயதில், வாழ்க்கை அடித்துத் துவைத்து, கசக்கிப் பிழிந்து வீசிய ஒரு பெண் தன்னைத் தானே மீட்டெடுத்து, தனக்கு தானே ஆதர்சமாகி, அறிவின் துணை கொண்டு வாழ்வை எதிர் கொண்டு நிமிர்ந்து நிற்கிறார்.
தன் இரு கரங்களை நீட்டி வாழ்வின் வாதைகளில் சிக்கியிருப்பவரையும், புறக்கணிக்கப்படுபவரையும், வாழ்வே கொடுந்துயர் என நம்பிக் கொண்டிருப்பவர்களையும் ஆறுதலாக அணைத்துக் கொள்கிறார். அவர்களை வழி நடத்திச் செல்கிறார்.
தாஜ்மஹால் பற்றிய அவரது கட்டுரையில் நெகிழ்ந்து, டாக்டர் அனிதா எம்பிபிஎஸ் கட்டுரையில் கண்கலங்கி அதற்கு மேல் படிக்க திராணியில்லாமல் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். இன்றுதான் ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன்.
"எரிந்து கொண்டிருக்கும் ஒரு மெழுகுவர்த்தி இன்னொரு மெழுகுவர்த்தியை பற்ற வைக்க வில்லை என்றால் அந்த மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருப்பதற்கு பெரிய அர்த்தம் ஒன்றும் இல்லை" என்று சிறு வயதில் படித்திருக்கிறேன்.
அன்பும் அறிவும் பகிரப் பகிர கூடும், வளரும் என்பது என் நம்பிக்கை.
என் பிரியமான தோழர் ஷாலின் தன்னுடைய அன்பையும் அறிவையும் இந்த சமூகத்தின் பொதுச் சொத்தாக கருதி பகிர்ந்தபடி, வாழ்கையை ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார் .
அவருக்கு என் அன்பும் பிரியங்களும் வாழ்த்துக்களும்...
லவ் யூ ஷாலின்.

கருத்துகள் இல்லை: