புதன், 22 மே, 2019

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு
மாலைமலர் :தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை: பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:- தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.


ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் வரை ஆகும். தேர்தல் முடிவுகளை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலம் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: