வியாழன், 23 மே, 2019

தேனியில் என்ன நடக்கிறது?

மின்னம்பலம் : 5 மணி நிலவரம்: தேனியில் என்ன நடக்கிறது?தேனி மக்களவைத் தொகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் 4 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடை பெற்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் 14 வது பூத்தின் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக 64 வது பூத்தின் வாக்குப் பதிவு இயந்திரம் இருந்திருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1மணி நேரம்வரை அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2.45 மணிக்கு மீண்டும் 6ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “4, 5 ஆகிய சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். அதனை துரிதப்படுத்த வேண்டும் என்று சொன்னோம். விரைவில் அறிவிப்பதாக உறுதியளித்தனர். இல்லையெனில் நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம். அனைத்து தொகுதிகளிலும் 10 சுற்றுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் இங்கு 3 சுற்றைத் தாண்டவில்லை. தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளையும் இன்னும் அறிவிக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியிருக்கிறோம். விரைவில் செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். பிரச்சினை தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் நாங்கள் பிரச்சினை செய்வதற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், “அனைத்து இடங்களிலும் திமுக வெற்றிபெறுகிறது. ஆனால் தேனியில் மட்டும் அதிமுக முன்னிலையில் இருப்பது எப்படி என்று எங்களுக்கு புரியவில்லை. ஒரு பூத்தில் எங்களுக்கு 15 பூத் ஏஜெண்டுகள் உள்ளனர். ஆனால் அந்த பூத்தில் எங்களுக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை என்று காட்டுகிறது. இதுவும் எப்படியென்று தெரியவில்லை. அப்படியென்றால் எங்கள் பூத் ஏஜெண்டுகள் பணம் வாங்கிக் கொண்டு மாற்றி ஓட்டுப் போட்டுவிட்டனர் என்று கூறுகிறார்களா? 300 கோடி ரூபாய் இருந்தால்தான் இனி தேர்தலில் நிற்க முடியும் போல” என்று விமர்சித்தார்.
சுமார் 4.45 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 31, 587 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் முன்னிலையில் இருந்துவருகிறார்.
இதுவரை எண்ணப்பட்டுள்ளது 6 சுற்று வாக்குகள்தான். ஒரு மக்களவைத் தொகுதியில் 14 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படும் நிலையில், இன்னும் 8 சுற்றுகள் மீதமிருப்பதால் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக விழிப்புடன் வாக்கு எண்ணிக்கையை கவனித்து வருகின்றனர் காங்கிரஸ் முகவர்கள்.

கருத்துகள் இல்லை: