சனி, 25 மே, 2019

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

மத்திய அமைச்சராகிறார்   ஹெச்.ராஜா?மின்னம்பலம்:  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனியாகவே அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார் மோடி. 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றிபெற்றது. இம்முறை அதைவிட 21 தொகுதிகள் அதிகமாக பெற்று பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 352 இல் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் , “மீதமுள்ள 190 இடங்களில் ஏன் தோல்வி அடைந்தோம், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏன் ஒரு இடம் கூட பாஜகவுக்குக் கிடைக்கவில்லை ?” என்பதே பாஜக தலைவர் அமித் ஷாவின் முக்கியக் கேள்வியாகவும், ஆலோசனையாகவும் இருந்து வருகிறது. தமிழக ஆர்எஸ்எஸ் அமைப்பும் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஆலோசனை தீவிரமாக நடந்துவரும் நிலையில், தங்களுக்கு ஒரு எம்பியை கூட தராத மாநிலமாக இருந்தாலும் தமிழக பாஜகவுக்கு ஒரு மத்திய அமைச்சர் பதவியைத் தருவது என்று முடிவு செய்துள்ளதாம் பாஜக மேலிடம்.
இதற்கிடையே பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியைத் தழுவியவருமான ஹெச்.ராஜா அவசரமாக நேற்று (மே 24) டெல்லி சென்றுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போதே , ‘இந்த முறை பாஜக ஆட்சி அமைத்தால், நான் ஜெயித்தால் வனம் மற்றும் சுற்று சூழல் துறை அமைச்சர் உறுதி’ என்று தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் தெரிவித்திருந்தார் ஹெச்.,ராஜா. இந்நிலையில் ராஜாவின் டெல்லி பயணத்தின் மூலம் புதிய அமைச்சரவையில் தமிழக பாஜகவின் பிரதிநிதியாக ஹெச்.ராஜா இருக்கலாம் என்ற பேச்சு வலுவாகியிருக்கிறது.
ராஜா மத்திய அமைச்சரானால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஆதரவோடு தமிழ்நாட்டில் இருந்தே அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் ஆர் எஸ் எஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: