வெள்ளி, 24 மே, 2019

இளையராஜா அரசியல்? முதல் கட்டமாக கமலையும் ரஜனியையும் இணைக்கும் முயற்சி!

டிஜிட்டல் திண்ணை: அரசியலில்  ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைன் வந்தது. கொஞ்ச நேரம், ‘டைப்பிங்’ மோடில் இருந்த வாட்ஸ் அப் சில நிமிடங்களில் மெசேஜை அனுப்பியது.
“மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று அரசியல் தலைவர்கள் பலரும் ரிசல்ட் அறிய ஆவலோடு காத்திருந்தார்கள். தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்திவிட்டார்கள். அதேநேரம் சட்டமன்றத் தேர்தல் வரும்போது கட்சி தொடங்குவேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்ட ரஜினியும் இந்தத் தேர்தலின் முடிவுகளை டிவியில் பார்த்துள்ளார். மோடி வெற்றி முகத்தில் இருந்தபோதே அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. இது வெளியே தெரிந்தது. இதைத் தாண்டி நேற்றைய தேர்தல் முடிவுகள் பற்றி தனது நெருக்கமான வட்டாரத்துடன் விவாதித்திருக்கிறார் ரஜினி என்பதுதான் முக்கியமான விஷயம்.

தர்பார் ஷூட்டிங்காக வெளியூர் சென்றிருந்த ரஜினி மே 15 ஆம் தேதி சென்னை வந்தார். அன்று மட்டுமே போயஸ் கார்டனில் இருந்த ரஜினி, 16 ஆம் தேதியே கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் தனது பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கேயே ஒரு வாரம் தங்கியிருந்தவர் தேர்தல் முடிவுகளுக்கு சில நாட்கள் முன்பு, பெங்களூருவில் இருக்கும் தன் உயிர் நண்பரான ராஜ் பகதூருக்கு போன் போட்டிருக்கிறார். ’ப்ளைட் டிக்கெட் எடுத்து அனுப்புறேன் உடனே நீ சென்னை வா’ என்று அழைத்திருக்கிறார் ரஜினி. ஆரம்ப காலத்தில் ரஜினியை பெங்களூருவில் இருந்து திரைப்பட முயற்சிகளுக்காக சென்னை அனுப்ப டிக்கெட் எடுத்துக்கொடுத்தவர் ராஜ் பகதூர்தான். வாழ்வில் எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் ராஜ் பகதூரைக் கேட்காமல் எடுக்க மாட்டார் ரஜினி. அந்த வகையில், இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் பற்றி சில முக்கியமுடிவுகளை எடுக்க நினைத்திருந்தார் ரஜினி. அதற்காகவே ராஜ் பகதூரை சென்னைக்கு அழைத்திருக்கிறார்.
பிளைட் டிக்கெட்டை மறுத்து தனது வழக்கம்போல பஸ்ஸிலேயே புறப்பட்டு மே 23 ஆம் தேதி காலையில்தான் சென்னை வந்துள்ளார் ராஜ் பகதூர். வந்தவரை பிக் அப் செய்து தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தார் ரஜினி. அங்கே ரஜினி, ராஜ் பகதூர், ரஜினிக்கு நெருக்கமான சென்னை நண்பர் நடராஜன் உள்ளிட்ட நான்கைந்து பேரே இருந்துள்ளனர்.
தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் பாஜக வென்றிருப்பதை ராவ் பகதூரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்தியா முழுதும் மோடி ஆதரவு அலை வீசிய நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மோடி எதிர்ப்பு அலை வீசி ஒரே ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி ஜெயித்திருப்பதை ரஜினி ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறார். அப்போது, ‘நான் கட்சி ஆரம்பிச்சா பிஜேபியோட ஒரு லைன் எடுத்து போகலாம்னு நினைச்சேன். ஆனா தமிழ்நாட்ல அது சாத்தியமா? இன்னும் ரெண்டு மூணு தேர்தல் ஆனாலும் இங்கே பிஜேபிய விடக் கூடாதுன்னு மக்கள் வைராக்யமா இருக்காங்களே’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.
அப்போது ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர், ‘நான் ஆரம்பத்துலேர்ந்தே உன்கிட்ட இதைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நீதான் ஆன்மீக அரசியல் அது இதுனு சொல்லிக்கிட்டிருக்கே. தமிழ்நாடு பாலிடிக்ஸ் வேற. இங்க பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணா சரியா வரவே வராது. அதனால நீ எந்த சூழல்லையும் பிஜேபி கூட நெருங்கக் கூடாது’ என சொல்லியிருக்கிறார்.
ரஜினி நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே இளையராஜாவிடம் இருந்து அவருக்கு போன் வந்திருக்கிறது. அவரும் தேர்தல் முடிவுகளைப் பார்த்துவிட்டே ரஜினியிடம் பேசியிருக்கிறார். ‘ரஜினி... நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு இதுதான் சரியான நேரம். இதுக்கு மேல கால தாமதம் செய்ய வேணாம். அரசியல் பத்தி உங்களுக்கு ஆயிரம் யோசனை இருக்கலாம். என்னோட தனிப்பட்ட ஒரு யோசனையை நான் சொல்றேன். ரஜினியும் கமலும் சேர்ந்து நடிச்சது போல ரெண்டு பேரும் அரசியல்லயும் சேர்ந்து நிக்கணும். இதப் பத்தி யோசிச்சுப் பாருங்க. நான் வேணும்னா கமல்கிட்ட பேசுறேன். அவரை என் வீட்டுக்கு வரச் சொல்றேன். நீங்களும் என் வீட்டுக்கு வாங்க. உக்காந்து பேசுவோம். அப்படி என் ஆசை நிறைவேடுச்சுன்னா தமிழ்நாட்ல அடுத்து இந்த கூட்டணிதான் நிக்கும்’ என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா. அதைக் கேட்டுக்கொண்ட ரஜினி தனது பாணியில் சிரித்து இளையராஜாவுக்கு பதில் எதுவும் சொல்லாமல் போனை வைத்தாராம்’ எனறு முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.
‘அரசியலின் திசை மாற்ற இசையால் முடியுமா பார்ப்போம்’ என்ற கமெண்ட் போட்டு இதை ஷேர் செய்த ஃபேஸ்புக் ஆஃப் லைனுக்கு போனது.

கருத்துகள் இல்லை: