புதன், 8 மே, 2019

தேனிக்கு டுப்பிளிகேட் ஓட்டு இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சி...

தேனிக்கு திடீர் இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா?மின்னம்பலம் : தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில், நேற்று (மே 7) இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட வாக்கு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் நடந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி கம்மவர் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த கல்லூரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது தேனி வட்டாட்சியர் அலுவலகம்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 50க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து இறங்கும் தகவல் அறிந்து திமுக, காங்கிரஸ், அமமுகவினர் அங்கே குவிந்தனர்.
திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணியில் இருந்த தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் தகவல் அறிந்து உடனடியாக தேனி விரைந்தார். இடப்பற்றாக்குறை காரணமாக ஈரோடு, கோவையில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி கொண்டுவரப்பட்டுள்ளது என்று முதலில் தகவல்கள் வந்தன.

ஆனால் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் வெற்றிக்காக மோசடி செய்வதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
தேனி மாவட்ட நிர்வாகத்திலோ, “பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் வடுகப்பட்டி , ஆண்டிபட்டியில் இரு வாக்குச் சாவடிகளில் மறு தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக வந்திருக்கலாம்’ என்று சொல்கிறார்கள்.
ஆனால் இரவு முழுதும் தேனியில் நீடித்த இந்த பரபரப்பு விடிந்தும் ஓயவில்லை. திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹுவிடமும் இரவே முறையிட்டிருக்கிறார்கள்.
தேனியில் நம்மிடம் பேசிய அமமுக பொறுப்பாளர்கள், ”ஓபிஎஸ் எப்படியாவது தன் மகனை கரையேற்ற முயற்சிக்கிறார். ரவீந்திரநாத் தேனியில் தோல்வி அடைவார் என்றே உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி அவரை ஜெயிக்க வைக்க பலத்த முயற்சி எடுத்து வருகிறார் பன்னீர் செல்வம். இதற்காகவே அவர் காசிக்கு சென்று வந்தார். தேனியில் வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவார் கல்லூரிக்குதான் இந்த இயந்திரங்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கே செல்வதற்குள் தகவல் பரவியதால் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் இறக்கிவிட்டார்கள். இதுகுறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து வட்டாட்சியர் எவ்வளவோ பேசிப் பார்த்தும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்குப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் வர வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு இப்போது வரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதில் இல்லை!

கருத்துகள் இல்லை: