வியாழன், 9 மே, 2019

மலம் திணித்து வன்கொடுமை: முதல்கட்ட அறிக்கை தாக்கல்!

மலம் திணித்து வன்கொடுமை: முதல்கட்ட அறிக்கை தாக்கல்!மின்னம்பலம் : மன்னார்குடி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்து வன்கொடுமையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசிடம் முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் திருவாரூர் ஆட்சியர் ஆனந்த்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள திருவண்டுதுறையைச் சேர்ந்தவர் கொல்லிமலை. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். கடந்த மாதம் 28ஆம் தேதியன்று செங்கல் சூளை பணிக்குச் சென்ற கொல்லிமலையை, அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ், சக்திவேல், ராஜ்குமார் ஆகிய மூவரும் தாக்கினர். மரத்தில் கட்டிவைத்து அவர் வாயில் மலத்தைத் திணித்து, சிறுநீர் கழித்தனர். இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கொல்லிமலை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் தனது குடும்பத்தினரை அவர்கள் மிரட்டி வருகின்றனர் என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் கோட்டூர் போலீசார். இந்தப் புகாரின் பேரில் சக்திவேல், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். ராஜ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த். நேற்று (மே 8) இந்தச் சம்பவம் தொடர்பான முதல்கட்ட அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை: