சனி, 5 ஜனவரி, 2019

இந்தியாவின் முதல் தலைமறைவு பொருளாதார குற்றவாளி.. விஜய் மல்லையா.. டெல்லி நீதிமன்றம்

 Vijay Mallya becomes India’s first fugitive economic offendertamil.oneindia.com - lakshmi-priya : டெல்லி: இந்தியாவில் கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கு ஓட்டம் பிடித்த விஜய் மல்லையா தலைமறைவு பொருளாதார குற்றவாளி என டெல்லி பொருளாதார சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரூ.9000 கோடி கடனை இந்தியாவில் உள்ள 14 வங்கிகளில் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு ஓடி ஒளிந்தார் மல்லையா. அவரை லண்டன் போலீஸ் உதவியுடன் நாடு கடத்த இந்திய அரசு போராடி வருகிறது. இதுகுறித்து லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் இந்திய சிறைகள் மோசமானதாகவும் அசுத்தமாகவும் இருப்பதால் தன்னால் இந்திய சிறைக்கு செல்ல முடியாது என மல்லையா கூறியுள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மும்பை ஆர்தர் ரோடு சாலையில் உள்ள சிறைச் சாலையில் மல்லையாவை தங்கவைக்க உத்தேசிக்கப்பட்ட அறையை வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

மல்லையாவை தலைமறைவு குற்றவாளி என அறிவிக்க கோரி அமலாக்கத் துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்படி மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
100 கோடிக்கு மேல் மோசடி செய்து விட்டு வெளியூர் தப்புபவர்களை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கூறும் மசோதா கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு விசாரணையை தவிர்ப்பதற்காகவே வெளிநாடுகளுக்கு மல்லையா மற்றும் நீரவ் மோடி ஆகியோர் தப்பி சென்றுவிட்டனர்.
இதையடுத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இந்த புதிய சட்டத்தின் முக்கிய நோக்கமே தலைமறைவு பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து பணத்தை திரும்ப பெறுவதே ஆகும்.
நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுவிட்டதால் அதை எதிர்த்து மல்லையாவால் எதையும் செய்ய முடியாது. தொடர்ந்து அவர் தப்பிக்க நினைத்தால் மல்லையா தண்டனை பெறும் காலம் வரை காத்திருக்க அவசியம் இல்லாமல் அவரது சொத்துகளை அமலாக்கத் துறை விற்க முடியும். எனவே மல்லையா இந்தியாவுக்கு வந்தே தீர வேண்டும் என்பதே இந்த சட்டமாகும்.

கருத்துகள் இல்லை: