வெள்ளி, 4 ஜனவரி, 2019

பிளாஸ்டிக் தடை .. சனநாயக பொருளாதார விரோத பிளாஸ்டிக் தடை

Adv Manoj Liyonzon : ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது கண்டு பலரும் புளங்காகிதம் அடைவதை பார்க்க முடிகிறது
இது நியாயமான நடவடிக்கைதான் என்று பலரும், ஒருசில சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களும் வரவேற்கின்றனர்.
இது ஒரு வகையில் மட்டும் தான் ஏற்க முடியும் காரணம் இது அவசிமான நடவடிக்கை தான் என்றாலும் நியாயமற்ற ஒருதலைப்பட்சமான முடிவு ஆகும்.
அதாவது பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு நல்ல பொருளாதார சூழலுக்கு பன்முகப்படுத்தல் (Diversification) அவசியம். அதிலும் குறிப்பாக சுயதொழில் (Self Employed), சிறு மற்றும் குறு நிறுவனங்கள் (Small & Tiny Industries) அரசின் பேராதரவோடு அதிக எண்ணிக்கையில் வலிமையான அடுக்கு பிரிவாக (Segment) இருப்பதே ஒரு நாட்டின் சிறந்த பொருளாதார நிலைக்கான அடையாளம். இது தான் ஒரு நாட்டில் பெரு நிறுவனங்களால் ஏற்படக்கூடிய பொருளாதார பேரழிவுகளிலிருந்து (Economic Disaster) நாட்டை காப்பாற்றும்.

இதைத் தான் சைனா அரசு அமுல்படுத்தியுள்ளது. அங்கு சிறு குறு நிறுவனங்கள் பெருகியிருப்பதை காணலாம். அதன் விளைவாக சைனாவில் பெரு நிறுவனங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்காது. இதையும் கருத்தில் கொண்டு தான் சைனா அரசு வேண்டுமென்றே தனது பண மதிப்பை குறைத்து வைத்துள்ளது என்று அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. சைனா பொருளாதாரம் ஓரளவிற்கு வலுவாக இருப்பதற்கு பன்முகப்படுத்த்துதல் பொருளாதார (Diversified Economy) நடவடிக்கையும் ஒரு மிக முக்கிய காரணம்
எப்பொழுது ஒரு அரசின் முடிவு பெரு நிறுவனங்களை பாதிக்காமல், சுயதொழில், சிறு மற்றும் குறு நிறுவனங்களை பாதிக்கிறதோ அங்கே அந்த அரசு நாட்டின் பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கிறது என்றே பொருள்
தமிழகத்தில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையின் விளைவாக சுயதொழில், சிறு மற்றும் குறு நிறுவனங்களின் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பெரு நிறுவனங்களின் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சந்தையில் புழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. இது பெரு நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கையே ஆகும்
உதாரணம்:-
புழக்கத்தில் இருக்கும் பெரு நிறுவன ஷாம்பு பாக்கெட், மூல உணவு பாக்கெட், சிப்ஸ் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட்......, என்று அடுக்கிக் கொண்டே போகலாம்
இது ஏன் தடைபடவில்லை என்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலலாம், தமிழக அரசின் இந்த முடிவு பொருளாதார பேரழிவின் ஒரு அறிகுறி என்று
தடை என்றால் சுயதொழில், சிறு குறு மற்றும் பெரு நிறுவனங்கள் என்று பாரபட்சமில்லாமல் அனைத்திற்கும் இந்த தடை நீட்டிக்கப்பட்டால் தான் இது பாரபட்சமற்ற நேர்மையான முடிவு. இல்லையென்றால் இது சீரற்ற பாரபட்சம் நிறைந்த சனநாயக பொருளாதார விரோத நடவடிக்கை ஆகும்
ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடையை எதிர்த்து சுயதொழில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் ஆர்ப்பாட்டம் செய்தன, பெரு நிறுவனங்கள் இது குறித்து வாய் திறக்கவில்லை என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: