புதன், 2 ஜனவரி, 2019

தூத்துக்குடி அமெரிக்க இளைஞர்: உடனடியாக நாடு திரும்ப உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களும் போராட்ட காட்சியும் ; tamilthehindu :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை சந்தித்த அமெரிக்க இளைஞரின் விசா ரத்து செய்யப்பட்டது. அவர், இந்தியாவில் இருந்து நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மார்க் சியல்லா(35) என்பவர், கடந்த மாதம் 27-ம் தேதி தூத்துக்குடி வந்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற கிராமங்களுக்குச் சென்று, எதிர்ப்பாளர்களுடன் பேசியுள்ளார்.
இதுதொடர்பாக, அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அமெரிக்காவில் பிரீலேன்ஸ் செய்தியாளராக பணியாற்றி வருவதாகவும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக செய்தி கட்டுரைக்காக வந்திருப்பதாகவும் மார்க் சியல்லா தெரிவித்துள்ளார். அவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்ததும், விசா காலம் ஜன.21- வரை இருப்பதும் தெரியவந்தது. சுற்றுலா விசாவில் வந்த அவர், செய்தியாளராக வேலை செய்துள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு என தனியாக விசா வழங்கப்படுகிறது. சுற்றுலா விசாவில் வந்து, செய்தி சேகரிப்பது விசா விதிமுறை மீறல் என தெரியவந்தது.
விசா ரத்து செய்யப்பட்டதுஇதையடுத்து அவரது விசா, இந்திய குடியுரிமை அதிகாரிகள் மூலம் நேற்று ரத்து செய்யப்பட்டது. உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அவருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா நோட்டீஸ் கொடுத்தார். அதன்பேரில், மார்க் சியல்லா நேற்று மாலை 6.15 மணிக்கு கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்வதாகவும், பின்னர், கத்தார் வழியாக அவர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: