வியாழன், 3 ஜனவரி, 2019

சபரிமலை: செய்தியாளர்களைத் தாக்கிய பாஜக குண்டர்கள்!

சபரிமலை: செய்தியாளர்களைத் தாக்கிய போராட்டக்காரர்கள்!
மின்னம்பலம் : சபரிமலை சன்னிதானத்துக்குள் இரண்டு பெண்கள் சென்றதைக் கண்டிக்கும் வகையில் இரண்டு நாள் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
பிந்து, கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்கள் நேற்று சபரிமலை சன்னிதானத்துக்குள் நுழைந்து ஐயப்ப தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் இன்று (ஜனவரி 3) முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் அரசுப் பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கேரளம் மற்றும் தமிழக எல்லைகளில் அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பெண்கள் குழுவொன்று தடுப்பைத் தாண்டி கேரள தலைமைச்செயலகத்துக்கு அருகில் சென்று முற்றுகையிட முயன்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மதிய உணவிற்காக வீடு திரும்பியபோது, அவருடைய அணிவகுப்பில் முன்னே சென்ற சோதனை வாகனத்தில் மோதி நான்கு காங்கிரஸ் தொண்டர்கள் காயமடைந்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது. கோயிலுக்குள் மாதவிடாய் ஏற்படும் பெண்களை அனுமதிக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முடிவு இந்துகளின் உணர்வுகளை குறைவாக மதிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
செய்தியாளர்கள் தாக்குதல்
இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பல பெண்கள் உட்பட 100 பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. “என் பின்னால் இருந்து ஒருவர் என்னைக் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடைய பணி அனுபவத்தில் இது மோசமானது” என்று கைரளி தொலைக்காட்சியின் வீடியோகிராபர் ஷாஜிலா அப்துல்ரகுமான் கூறினார்.
சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்ற இரண்டு பெண்களிடம் பேட்டி எடுக்குமாறு இவருக்கு வேலை ஒதுக்கப்பட்டிருந்தது. சங் பரிவார் நடத்திய போராட்டத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தார். தன்னைத் தாக்கிய பிறகும், கண்ணீரோடு அங்கு நடைபெற்ற போராட்டத்தை இவர் படம்பிடித்துள்ளார். “என்னை எங்கிருந்து தாக்கினார்கள் என்று தெரியவில்லை. நான் வலியில் துடித்துக் கொண்டிருந்தபோது, என் கேமராவை பிடுங்க முயற்சித்தார்கள். அதைத் தக்க வைத்துக்கொள்ள என் முழு பலத்தைப் பயன்படுத்தினேன். எனது கழுத்துப் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பாஜகவை பார்த்து பயப்பட மாட்டேன். தொடர்ந்து என்னுடைய வேலையைச் செய்வேன்” என்று ஷாஜிலா தெரிவித்தார்.
கோவையில் கைது
சபரிமலை விவகாரம் தொடர்பாக, கோவையில் ரயிலை முற்றுகையிடச் சென்ற 60க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் நடத்தவிடாமல், இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தினர்.
பாஜகவைச் சேர்ந்த 15 பேர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் புகைப்படத்தை எரித்தனர். சபரிமலை சன்னிதானத்தின் புனிதத்தன்மையைப் பராமரிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
சபரிமலை விவகாரத்தினால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 25 பேருந்துகளின் இயக்கத்தை ரத்து செய்தது.
உள் துறையிடம் கோரிக்கை
மத்திய உள் துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் ஹனுமான் சேனா ஆர்வலர்கள். இந்த சம்பவம் இந்துக்களின் நம்பிக்கையைக் காயப்படுத்தியுள்ளது என்றும், கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: