வெள்ளி, 4 ஜனவரி, 2019

துரைமுருகன் அப்போலோவில் அனுமதி .. நெஞ்சுவலி ... விரைவில் வீடு திரும்புவார் .

தீவிர சிகிச்சை /tamil.oneindia.com hemavandhana.:
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அழுகையோ, சிரிப்போ எல்லாமே இவருக்கு ஒன்றுதான். வெளிப்படையான இவரது குணம் அனைவரையுமே ஈர்க்கக்கூடிய ஒன்று.
நிறைய உணர்ச்சி வசப்பட்டாலும், இவரிடம் ஹியூமர் சென்ஸ்தான் அதிகம். எப்போதுமே கலகல பேச்சுதான், கலகல பேட்டிதான். சட்டசபையில் இவரது பேச்சுக்கென்றே அனைத்து கட்சிகளிலும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மிஸ்டர் துரைமுருகன்.. ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா எதிரே வந்த துரைமுருகன் வணக்கம் கூற, அப்போது ஜெயலலிதாவோ, "மிஸ்டர் துரைமுருகன்... உங்களுக்கு நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு. அரசியலுக்கு வராமல் சினிமாவில் வந்திருந்தால் நீங்க ஒரு நல்ல நடிகனா வந்திருப்பீங்க" என்றார்.




உணர்ச்சிவசப்பட்டார்

அந்த அளவுக்கு கலகல துரைமுருகன் நேற்று மனம் கலங்கி கதறி அழுதுவிட்டார். சபையில் கருணநிதிக்கு இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தும்போது, நிறையவே உணர்ச்சிவசப்பட்டு பேசினார். நா தழுதழுக்க அவரால் பேச முடியாமல் ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டார். அவரை பக்கத்தில் இருந்த ஸ்டாலின் போன்றவர்கள் ஆசுவாசப்படுத்தி, ஆறுதல் சொன்னார்கள்.



தீவிர சிகிச்சை

இந்நிலையில், இன்று அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. இதனால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மீண்டும் நெஞ்சுவலி

ஏற்கனவே தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்ததை நேற்றுகூட அவையில் சொன்னார் துரைமுருகன். தனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர் கலைஞர்தான் என்றார். எனவே மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


வீடு திரும்புவார்கள்

வீடு திரும்புவார்கள்

இரு தினங்களுக்கு முன்பு பேராசிரியர் அன்பழகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இப்போது துரைமுருகனும் சிகிச்சையில் உள்ளார். திமுகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து சுகவீனமாகி வருவது அக்கட்சியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும், சிகிச்சை முடிந்து இருவருமே விரைவில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை: