வியாழன், 23 ஆகஸ்ட், 2018

டிஜிட்டல் இந்தியா + ஆதார் = பேரழிவு!, சேதத்தை சரி செய்ய பல வருடங்கள்?

.savukkuonline.com - jeevanand-rajendran : ஆதார் மிகவும் பாதுகாப்பானது, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டும் தான் ஆதாரை கண்டு அஞ்ச வேண்டும் இது போன்ற கூற்றுக்களை தினம் தினம் நாம் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறோம், அதே சமயம் எதோ ஒரு வகையில் ஆதாரை வைத்து தகவல் திருட்டு, சில சமயங்களில் பொருளாதார திருட்டு நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆதாரை பயன்படுத்தி ஒரு நூதன திருட்டு எப்படி நடந்தது என்பதை பார்ப்போம்.
ஆந்திரா என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தகவல் தொழில்நுட்பத்தில் முன்னோடி மாநிலம் என்பதே. அரசு ஆவணங்கள், தகவல் பரிமாற்றங்களை கணினி மயமாக்குவதில் அந்த அரசு மிகவும் முனைப்புடன் செயல்படும், அதில் ஒரு பகுதியாக சொத்து பத்திரங்களை 2012 முதல் டிஜிட்டல் ரெக்கார்ட்டாக வைக்கத்தொடங்கியது. இதன் நோக்கம் மிக எளிதாக சொத்து விபரங்களை சரிபார்ப்பதும், தொலைந்து போவதை பற்றி பயப்படத் தேவை இல்லை எனபதும் தான்.
Mee-Seva மையம் மூலம் யார் வேண்டுமானாலும் 250 ரூபாய் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இது தவிர Mee-Seva வலைதளத்தில் முதல் இரண்டு பக்கங்கள் மட்டும் பிரிவியூ செய்யும் வசதியும் உண்டு. இரண்டாம் பக்கத்தில் இருக்கும் தகவல் தான் இந்த திருட்டுக்கு தேவையானது, சொத்து வாங்குபவர், விற்பவர் மற்றும் 2 சாட்சிகள்  இவர்கள் உடைய பெயர் ,வயது மற்றும் கைரேகை.

இந்த தகவல்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடிவெடுக்கும் ஒரு நபர் அந்த கைரேகையை கொண்டு பாலிமர் பிரிண்டர் உதவியுடன் அந்த கைரேகையை ஒரு மோல்டாக செய்கிறார், அதனை பயன்படுத்தி கருப்பு சந்தையில் கிடைக்கும் ஆதார் e-KYC கருவி மூலம் சுமார் 6000 சிம் கார்டு  ஆக்ட்டிவேட் செய்கிறார். ஆதார் என் கொடுக்காமல் வேறு நபர் பெயரில் ஆக்ட்டிவேட் செய்யப்படும் சிம் கார்டுகளுக்கு சந்தை மதிப்பு 500 முதல் தொடங்குகிறது. சுமார் 30 லட்சம் வரை சம்பாதித்திருப்பார் என்பதை விட்டுவிடலாம்.
இந்த போலி சிம் கார்டை பயன்படுத்தி ஒருவன் செய்யும் மோசடி செயல்களுக்கு எங்கோ ஒரு இடத்தில் நிலம் விற்பவரோ, வாங்குபவரோ ஏன் சாட்சி கையெழுத்து போட்டவரோ பதில் சொல்ல நேரிடும்.
இது தவிர e-KYC மூலம் வலைத்தளம் மூலம் பான் கார்டு வாங்க முடியும், வங்கி கணக்கு தொடங்க முடியும். e-KYC மூலம் நடைபெறும் மோசடியை தடுப்பதற்க்கு mAaadhar செயலி மூலம் நமது பயோமெட்ரிக்ஸ்சை லாக் செய்ய UIDAI அறிவுறுத்துகிறது.
இது நல்ல யோசனை தான் என்றாலும் இந்த செயலி உங்கள் சிம் கார்டுடன் பிணைக்கப்பட்டிருக்கும், பயோமெட்ரிக்ஸ் லாக் செய்த பின் உங்கள் போனை நீங்கள் தொலைத்து விட்டால் மீண்டும் சிம் கார்டு வாங்க e-KYC மூலம் ஆக்ட்டிவேட் செய்யவேண்டும் அதற்கு உங்கள் பயோமெட்ரிக்ஸ் அன்லாக் செய்ய வேண்டும்.
இதை விட இதில் ஒரு பெரும் ஆபத்து அடங்கியிருக்கிறது.  மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க காலத்தில், சிம் பெறுவதற்கு என பெரிய அளவில் அடையாள ஆவணங்கள் தேவைப்படவில்லை.  யார் வேண்டுமானாலும், எந்த கடையில் வேண்டுமானாலும் சென்று, சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.  இது போல சிம் கார்டுகளை பெற்று, பல கிரிமினல் குற்றங்கள் நடைபெற்றது கண்டறியப்பட்டது.
குற்றவாளிகள் பெரும்பாலும் மொபைல் போனில் தங்கள் குற்றச் செயல்களை விவாதிக்கின்றனர் என்பதை அறிந்து, இதை நெறிமுறைப் படுத்த வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது.  அதன் பின்னர்தான், சிம்கார்டு ஒன்றை பெற, உரிய அடையாளச் சான்றுகளை அளிக்க வேண்டும் என்ற நடைமுறை வந்தது.
செல்போன்களில் உள்ள சிம் கார்டுகளை வைத்து, இந்தியா முழுக்க பல்வேறு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
தற்போது, ஐதராபாத்தில்  ஆதார் தகவல்களை மட்டும் வைத்து, 6000 சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்ய முடிகிறதென்றால் இது எத்தகைய ஆபத்து ? இணைப்பு
எல்லாம் டிஜிட்டல் மயம் என்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால், தனி நபர் டேட்டாக்களை இப்படி ஊர் முழுக்க வியாபாரம் செய்வதா டிஜிட்டல் இந்தியா ?
மோடி அரசின் தான்தோன்றித்தனமான பல திட்டங்களால் நாடே பாழ்பட்டுக் கொண்டு இருக்கிறது.
வரும் தேர்தலில் மோடி தோல்வியடைந்தாலும் அடையலாம்.  ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில்  அவர் ஏற்படுத்திய சேதத்தை சரி செய்ய பல வருடங்கள் ஆகும் என்பது மட்டும் தெள்ளத் தெளிவான உண்மை.

கருத்துகள் இல்லை: