புதன், 22 ஆகஸ்ட், 2018

ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக! கேரளா வெள்ளநிவாரணம்

வெள்ளம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக!மின்னம்பலம: கேரள வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி இதுவரை 357 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இயற்கை பேரிடர் அம்மாநில உட்கட்டமைப்புக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் கேரள மாநில மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர கேரள மாநில கழக நிர்வாகிகள் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

எனினும், “கேரளாவில் நிகழ்ந்துள்ள இந்த மிகக் கடுமையான பேரிடரால் அம்மாநில மக்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற நேரத்தில், அம்மாநில சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக அளிப்பார்கள்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளம், கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதுபோன்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் அவர்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார். தெலங்கானா துணை முதல்வர் முகம்மது அலி தனது ஒரு மாத ஊதியத்தைக் கேரள நிவாரண நிதிக்காக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: