வியாழன், 23 ஆகஸ்ட், 2018

தனித் தமிழ் தேசியம் இன்று சாத்தியமா?

சிறப்புக் கட்டுரை: தனித் தமிழ் தேசியம் இன்று சாத்தியமா?மின்னம்பலம்: வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்- இன்று தமிழ் தேசியம் குறித்த விவாதங்கள் பல தளங்களில் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டில் வசிக்கும் “வந்தேறிகள்” குறித்த குரலும் உரக்க ஒலிக்கிறது. இந்தச் சூழலில் தேசிய இனங்கள், தமிழ் தேசியம், சுயாதிகார உரிமை ஆகியவை பற்றியெல்லாம் திறந்த மனதோடு விவாதிக்க வேண்டியுள்ளது.
தேசிய இனங்களின் தோற்றம்
தேசிய இனங்களின் தோற்றத்தைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு வரலாம். உலக நாகரிகங்கள் தோன்றியவுடன் மானிடம், இனம் இனமாகக் கூடி வாழ்ந்தது. அப்படிக் கூடி வாழ்ந்த இனங்களுக்குள் சில பொதுவான குணங்களும், தன்மைகளும், உறவுமுறைகளும் ஏற்பட்டன. சமுதாயம் சிந்திக்கத் தொடங்கியபோது, தங்கள் இனம், தங்கள் மண் என்ற பார்வைக்குத் தள்ளப்பட்டன. அந்த மக்களிடையே பேச்சு வழக்கில் மொழி தோன்றியது.
இப்படியான சில காரணிகளால் கூட்டாகக் கூடி வாழ வேண்டிய நிலைக்கு இயற்கை தள்ளும்போது பொது அமைப்பு ரீதியான சில வரையறைகளுக்குட்பட்டு ஓர் இனம், தங்களைச் சார்ந்த மண் (தேசம்) வாழ உட்படுகிறது. அந்த இனம், மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நாடும் கொண்டிருந்தால், ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர் நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால், அது தேசிய இனமாகிறது.
ஒரு நாட்டில் பல தேசிய இனங்கள்
ஒரு நாட்டில் நிலையாகக் குடி வாழும் மக்கள் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களா என்பதும் விவாதத்துக்குட்பட்டது. உதாரணத்துக்கு கனடாவில் கியூபிக் பிரச்சினையும், சுவிட்சர்லாந்தில் ஜெர்மானியர், பிரெஞ்சுக்காரர், இத்தாலியர் போன்ற நாட்டினர் வாழ்வதால் சுவிட்சர்லாந்தியர் என்ற புதிய தேசிய இனமாக இவர்கள் ஒன்றுபட்டுவிடவில்லை. மேற்கண்ட மூன்று இனத்தவரும் அவரவர்கள் மொழியின் அடிப்படையில் தனித்தனி தேசிய இனங்களாகத் தனித்தனிப் பகுதிகளில் சுயாதிக்க உரிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள்.
ஒரு தேசிய இனத்தைப் பகுத்தாய்வு செய்யும்போது மதம் அடிப்படையாக இருக்குமா என்று வினாவும் எழுகிறது. இதைக் குறித்தான விவாதங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மேற்கே அல்ஜீரியாவில் இருந்து, வளைகுடா நாடுகள், கிழக்கே இந்தோனேசியாவில் இஸ்லாமிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். அதை ஒரு தேசிய இனமாகக் கருத முடியாது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனில் இஸ்லாம் மதத்தில் சில பிரிவுகள் இருப்பதால் அது ஒரு தேசிய இனமாகப் பிரித்துக் காண முடியாது என்று கருத்தைச் சொன்னாலும், அதற்கு முரணான கருத்துகளையும் சிலர் வைக்கின்றனர்.
மதமும் தேசிய இனமும்
அரேபிய மொழி பேசும் முஸ்லிம்கள் அரேபியர் என்றும், துருக்கி மொழி பேசும் முஸ்லிம்கள் துருக்கியர் என்றும், புஸ்டு மொழி பேசும் முஸ்லிம்கள் புஸ்டுக்கள் எனவும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வகைமைகள், இஸ்லாமியர்கள் ஒரே தேசிய இனத்துக்குள் உட்பட்டவர்கள் அல்லர் என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பண்பாடுகளுடன் வாழும் மக்களை ஒரு தேசிய இனம் என்று சொல்லிவிட முடியாது.
தேசிய இனத்திற்கு மொழி, மரபு ரீதியான பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகள் என்பவையே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒரு தேசிய இனம் வாழும் நிலப்பகுதி, எல்லைகளோடு கூடிய மண், ஒரு நாடாக (State) அழைக்கப்படுகிறது. நாடு (State) என்பது அரசு. அது இறையாண்மை கொண்ட நிலப்பரப்பில் வாழும் மக்கள் சமுதாயத்தைக் குறிப்பிடுவதாகும். அது எத்தனை மொழிகள் கொண்டதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தேசம் (Nation) என்பது மரபு வழியாக ஒரு மொழி, கலாச்சாரம் கொண்டதாக இயங்க வேண்டும்.
ஒரு தேசம் என்பது ஒரு நாடாக இருக்கலாம். தனி நாடு சுயநிர்ணய உரிமையில் பிரியும்போது பன்னாட்டு அங்கீகாரமும் ஒரு முக்கியமான காரணியாகும். ஒவ்வொரு நாடும் ஒரு தேசமாக இருப்பதுவும் இல்லை என ஜான் ஹட்சின்சன், ஆன்டனி டி. ஸ்மித் ஆகியோர் நேஷனலிசம் (Nationalism) என்ற ஆங்கில நூலில் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிப் பன்மையில் ஒரு குடையின் கீழ் கூட்டாட்சி என்று சொன்னாலும், ஒற்றையாட்சிதான் இங்கு நடக்கிறது.
தமிழகத்தின் வரலாறு
தொல்காப்பியர் குறிப்பிட்டவாறு, “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’’ தமிழகத்தின் எல்லைகள் அக்காலத்திலேயே வரையறுக்கப்பட்டது. இந்த எல்லைகள் அமைந்த இந்த நிலையை ஒரே மொழி, இலக்கியச் செறிவுகள், தொன்மையான இனப் பண்பாடுகள் ஒருங்கிணைந்து அமைந்த இந்த மண்ணில் அரசு (Government) அமைந்து நிர்வாகத்தைப் பரிபாலிக்க வேண்டும். இதன் கீழ் குடிகள் வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை முறைகள் சீராக்கப்படும். இப்படித்தான் தேசிய இனங்கள், பொதுப் பழக்கவழக்கத்தில் தங்களுக்காகவே அமைத்துக்கொள்கின்ற நாடு, அரசு ஆகும்.
அதற்கு அடிப்படை ஒரே மொழியும், கலாச்சாரமும் பழக்கத்தில் கொண்ட மக்களின் கூட்டமைப்பே ஒரு தேசிய இனம். இது நேஷனாலிட்டி என (Nationality) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
தமிழ் தேசியத்தின் நிலை என்ன?
தமிழ் தேசியம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவெடுத்து, தொன்மையான மூத்த இனமாகவும், தமிழ்மொழி மூத்த மொழியாகவும் அறியப்பட்டது. ஆதியில் தமிழ்மொழி காலத்தில் வழக்கத்தில் இருந்த ஹீப்ரூ, லத்தீன் போன்ற மொழிகள் இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. தமிழ்மொழி இன்னமும் கன்னித் தன்மையோடு சிரஞ்சீவியாகப் புழக்கத்தில் உள்ளது.
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி வருவதற்கு முன் பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் கீழ் வட்டார வட்டாரங்களாக நிர்வாகம் இருந்தது. ஒரு குடையின் கீழ் காஷ்மீரிலிருந்து தென்குமரி வரை யாரும், எந்த மன்னரும் ஆட்சி செய்யவில்லை. ஆங்கிலேயர் வருகை, விடுதலைப் போராட்டம் முடிந்து நாடு விடுதலை பெற்ற பின் பல சமஸ்தானங்களை இணைத்து இந்தியக் குடியரசு என்று அமைந்தது. விடுதலை பெற்று 71 ஆண்டுகளாகியும் இந்தியாவினுடைய பல்வேறு தேசிய இனங்களில் பிரச்சினைகளும், வட்டார ரீதியிலான புறக்கணிப்புகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன.
வரலாற்றில் இமயமும் குமரியும்
தொல்காப்பியப் பாயிரம் தமிழகத்தின் எல்லைகள் சொன்னாலும், சேரன் செங்குட்டுவன் இமயத்தில் போய்க் கல்லெடுத்தது, யுவான் சுவாங் போன்ற சீன யாத்திரீகர்களும் புத்த பிட்சுகளும் காஞ்சிக்கு வந்தது ஆகியவை எல்லாம் வரலாற்றுச் செய்திகள்.
பண்டைய தமிழ் இலக்கியங்களிலே சங்க இலக்கியங்கள், இமயம் - பொதிகை – குமரிமுனை வரையான தொடர்புகளைப் பகிர்கின்றன.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்று தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பைக் குறிப்பது போன்று இமயம் முதல் குமரி வரை என்றும் இமயம் முதல் பொதிகை வரை என்றும் இந்தியாவின் நிலப்பரப்பையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுவதையும் காண முடிகிறது.
“பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே…” (புறநானூறு 2)
“பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய…” (புறநானூறு 39)
“பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன….” (புறநானூறு 369)
“தென்குமரி வடபெருங்கல்….” மதுரைக் காஞ்சி (வரி 70)
“பேரிசை இமயம் தென்னங்குமரியோடு ஆயிடை…..” பதிற்றுப்பத்து (பாடல் 11)
என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றுடன்
சிறுபாணாற்றுப்படை (வரி 48),
நற்றிணை (பாடல் 356 வரி 3, பாடல் 369 வரி 7),
குறுந்தொகை (பாடல் 158 வரி 5),
பரிபாடல் (பாடல் 1 வரி 51, பாடல் 5 வரி 48),
பரிபாடல் திரட்டு (பாடல் 1 வரி 77),
அகநானூறு (பாடல் 127 வரி 4, பாடல் 265 வரி 3)
இவ்வாறான தரவுகளால் இந்தியாவின் வடபுலத்துக்கும், தென்புலத்துக்குமான தொடர்புகள் இருந்துவந்துள்ளதாகச் சிலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகுதான் இந்தியாவை ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இந்திய மக்கள் பார்த்தார்கள் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவதை முழுமையாக ஒப்புக்கொள்ள முடியாது என்பதை மேலே குறிப்பிட்ட சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
(தமிழ் தேசியம் என்பதன் இன்றைய பொருள் என்ன, அதன் தேவை என்ன, சாத்தியப்பாடுகள் என்ன? நாளையும் அலசுவோம்…)
(கட்டுரையாளர்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதை சொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை – பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். மின்னஞ்சல்: rkkurunji@gmail.com)
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை: