ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

கேரளாவை பழிவாங்கும் வட மாநில இந்துத்வா ..இந்தி வெறியர்கள்

திரு.ஆழி.செந்தில் நாதன் அவர்களின் முகனூல் பதிவு:
கேரளத்திலுள்ள நமது மொழியுரிமை நண்பர்களைத் தொடர்புகொண்டு நிலைமையை விசாரித்தேன். மிகுந்த மனவேதனையோடு நடந்துவருவதைப் பதிவு செய்தார்கள். இந்திய அரசின் மீது ஒட்டுமொத்த கேரளமும் நம்பிக்கை இழந்திருக்கிறது.
நவீன இந்தியாவின் வளர்ச்சி என்று புது தில்லி பறைசாற்றிக்கொள்வதில் பெரும்பகுதியிலான வளர்ச்சியைத் தந்தவர்கள் தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், வங்காளிகள், பஞ்சாபிகள், தெலுங்கர்கள், மராத்தியர்கள், குஜராத்தியர்கள்...
இந்தி பிரதேசத்துக்கு அப்பால், இதில் குஜராத்தையும் அவர்களின் காலனியாக ஆக்கப்பட்டிருக்கிற மகாராஷ்ட்டிராவையும் தவிர. மற்ற மாநிலங்களில் எல்லாம் "இந்த அரசு நம்முடைய அரசு அல்ல" என்கிற உணர்வு பரவலாகக் காணப்படுகிறது என்றால், மோடி அரசைப் போல ஒரு "தேச விரோத" அரசு வேறு இல்லை என்று கூறிவிடலாம். இன்னும் எவ்வளவு துயரமும் பலியும் வேண்டும் புது தில்லிக்கு? பாவிகளா, வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக அத்தனை பனியா கம்பெனிகளும் கேரளாவையே ஒரு ஷாப்பிங் மாலாக மாற்றிவைத்திருக்கிறார்களே, தங்களுடைய சொந்த "மார்க்கெட்" மூழ்கிக்கொண்டிருக்கிறதே என்கிற பதற்றம்கூட இல்லையே அவர்களுக்கு?
இப்போது ஓடி வருகிறார் மோடி. Too little and too late என்கிறது மலையாள சமூக ஊடகம்.

ஆர்யவர்த்தத்தின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகவியலர்கள் என எல்லோருமே "வடவர் நம்மவரும் அல்லர், நல்லவரும் அல்லர்' என்கிற தெற்கின் குற்றச்சாட்டை நிரூபிக்கப்போட்டிப் போடுகிறார்கள். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்குகளிலும் கேரளத்துக்கு எதிராக பொங்கவும் செய்கிறார்கள்.
நம்பமுடியாத அளவுக்கு மதவெறி பிடித்த சில இந்து வெறி 'அறிவுஜீவிகள்', "இந்துக்களுக்கு மட்டும் உதவுங்கள், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உதவாதீர்கள்" என்று வெளிப்படையாக எழுதுகிறார்கள், சபரிமலை விவகாரத்தில் தலையிட்டதுதான் இந்தப் பேரழிவுக்குக் காரணமாக இருக்குமோ என்று யோசிக்கச் சொல்கிறார் தமிழ்நாட்டில் எதையும் 'உருப்படியாகச் செய்யத்தெரியாத' ஒரு பொலிட்டிக்கலி இம்பொட்டன்ட் புத்திசாலி.
இந்தச் சம்பவத்தில், முல்லைப்பெரியாறு உள்பட தமிழ்நாடு தொடர்பாக ஒரு கசப்பு உருவாகியிருக்கிறது. ஆனால் அதனால் உருவாகும் உணர்ச்சிகளுக்கு நாம் பலியாகக்கூடாது. கேரள அரசும் தவறு செய்கிறது என்பது உண்மை. ,
முதலில் உதவி. பிறகு உரையாடல் என்றுதான் நாம் இதை அணுகவேண்டும். அது ஒன்றே நமது நலன்களைக் காப்பாற்றுவதற்கான வெற்றி வியூகம்.
நம்மை சுற்றியுள்ள எல்லோரையும் நமது நண்பர்களாக மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை நமக்கு இருக்கிறது, அதைச் சாத்தியப்படுத்தக்கூடிய வரலாற்று முதிர்ச்சி நிலையில் நமது இனம் இருக்கிறது. நமது நலன்களை விட்டுக்கொடுக்காமலேயே அதை எவ்வாறு செய்வது என்கிற ராஜதந்திரம் மட்டுமே நம்மிடம் சற்றுக் குறைவு. ஆனால் அதை நாம் கற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.
மற்றவர்கள் அதைப்புரிந்துகொள்ள கூடுதல் காலம் எடுக்கலாம். ஆனால் அதற்கான நிர்பந்தத்தை இந்துத்துவ சக்திகளே அவர்களுக்கு வழங்கிவருகின்றன.
இந்த நிலையில், தேடித்தேடி நட்புகளை நாடும் தருணத்தில், தேடித்தேடி பகைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் சில நபர்கள் நமக்கு பெருந்தீங்கு இழைக்கிறார்கள்.
உண்மையில் இப்பிரச்சினை ஒரு சூழலியல் பிரச்சினை. இதில் தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என அனைவருக்கும் பங்கு உண்டு. மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழமைப்பைக் கெடுத்துவரும் நம் அனைவருக்கும் இந்த திடீர் பெருவெள்ளங்களும் நதிநீர் சிக்கல்களும் மிகப்பெரிய சவாலாக எழுந்துநிற்கின்றன. அனைவரின் துயரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.
இயற்கையின் துயரமாக, தெற்கின் சோகமாக உருவெடுத்துள்ள இச்சிக்கலின்போது நாம் நம் சேர நாட்டுச் சொந்தங்களோடு சேர்ந்து நிற்போம்.

கருத்துகள் இல்லை: