சனி, 25 ஆகஸ்ட், 2018

கலைஞர் படை எழுச்சி பாடல் ... தூய தமிழிசையின் மீள் வருகை?

தமிழ் மறவன : தற்போது தலைவர் கலைஞருக்கு தோழர்கள் எ.வ.வேலு,
சாவல்பூண்டி சுந்தரேசன் ஆகியோர் இசை வணக்கம் செலுத்தியதை இழிவு படுத்துகிற மூடர் கூட்டமே!
மிக முந்திய காலத்தில் தமிழிலேயே கீர்த்தனைகளை இயற்றி தமிழிசையை வளர்த்தவர் மூவராவார். அவர் சீர்காழி முத்துதாண்டவர்(1525-1625), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1711-1779), மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) என்பவர். இவர்கள் கீர்த்தனங்களும் பதங்களும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. தற்போதைய திடீர் போராளிகளுக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாது.
இன்றைய கருநாடக இசையில் கையாளப்பட்டுவரும் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய கீர்த்தனை வடிவத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் முத்துத்தாண்டவரே.
"பஜனை" எனும் சொல்லாடலால் அவைகளை புறந்தள்ள வேண்டுமா?
தற்காலத்திலும் அய்யா ந.அருணாசலம், அய்யா சுப.வீ, அய்யா பழ.நெடுமாறன் போன்றோர் புஷ்பவனம் குப்புசாமி, தேனிசை செல்லப்பா போன்ற பாடலாசியர்கள் மூலம் தமிழ் இசையை மீட்டெடுக்க ஆற்றிய பணிகள் குறித்த வரலாற்றை அறிவோம்..

தமிழ் இசை வெறும் வாய்ப்பாட்டு மட்டுமல்ல. தமிழிசைக்குப் பயன்படும் இசைக்கருவிகள் கூட தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்மக்களுக்குமே உரிமையாயிருந்து, இன்று இந்தியா முழுவதுக்கும் ஏன் உலக நாடுகளுக்கும் பரவியிருக்கின்றன. இவை யாவற்றுக்கும் அடிப்படையாக குழல், யாழ், முழவு என்னும் மூன்று கருவிகளே சான்றாக உள்ளன. இம்மூன்றும் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இடம் தமிழகமேயாகும். இன்று இவை பல நூறு இசைக் கருவிகளாக பல்கி பெருகியுள்ளன.
வரலாற்றை திருப்புவோம்.
கலையும்,இலக்கியமும், கானா முதல் கீர்தனைகள் வரை தமிழரின் சொத்து என்பதை முன்னெடுப்போம்.
பண்டைக்காலத் தமிழகத்தில் பண் இசைப்போரை பாணர் என்றும் பெண்டிரைப் பாடினி என்றும் குறித்தனர். இசைப் பாடல்களைப் பாடியவர்கள் இசைப்பாணர் என்றும் யாழ் இசைத்தவர் யாழ்பாணர் என்றும் அழைக்கப்பட்டனர். நடனமாடிய பெண்கள் விறலியர், கூத்தியர் என்று அழைக்கப்பட்டனர் என தமிழிலக்கிய நூல்கள் தெரிவிக்கின்றன. வடமொழியாளர் இசைபாடியதாகவோ நடனமாடியதாகவோ பழம் நூல்களில் குறிப்பு இல்லை.
நிலத்தை உழுது பயிரிடும் போதும் உணவுக்காக நெல்லைக் குற்றும் போதும் சுமை சுமந்து செல்லும் போதும் களைப்பின்றி நடக்கவும் ஆணும் பெண்ணும் பாடினர். அறுபடையிட்டு பொங்கலிட்டு ஆண்களும் பெண்களும் அகமகிழ்ந்து ஆடிப்பாடினர். நெடுஞ்சாலையில் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயமின்றி பயணம் செய்தனர்.
தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில : அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன.
நாடோடி இசைப்பாடல் வகைகள் : உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன தமிழர்களின் கலையேயாகும்
இதில் தலைவர் கலைஞருக்கு பாடிய புகழஞ்சலி எந்த வகையான பாடலென ஆய்வு செய்க ; அதைவிடுத்து ஆரிய பஜனையாய் தமிழர் மரபை மாற்றிச் சொல்வது அறிவுடமை அல்லவே!
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை: