ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

காங்கிரஸில் மீண்டும் மணிசங்கர் அய்யர்

காங்கிரஸில் மீண்டும் மணிசங்கர் அய்யர் மின்னம்பலம் : முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் மீதான இடைநீக்கம் உத்தரவை காங்கிரஸ் கட்சி ரத்து செய்ததைத் தொடர்ந்து மீண்டும் கட்சியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் மணிசங்கர் அய்யர். மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் கட்சியின் செயற்குழு பொறுப்புகளிலும் அவர் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, "பிரதமர் மோடி கீழ்த்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. ஏன் அவர் இவ்வாறு கண்ணியமற்ற அரசியலில் ஈடுபடுகிறார்" என்று மணிசங்கர் அய்யர் விமர்சித்திருந்தார். சாதி ரீதியாகவே அவர் விமர்சித்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மணிசங்கர் அய்யரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தாம் தெரிவித்த கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மணிசங்கர் அய்யர் கூறினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை பரிந்துரைந்தது. இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக டிசம்பர் மாதம் காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு அவரது இடைநீக்கம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் நேற்று (ஆகஸ்ட் 18) வெளியிட்ட அறிக்கையில், “மணிசங்கர் அய்யர் மீதான இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கட்சியின் ஒழுங்கு குழு பரிந்துரையை, கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மணிசங்கர் அய்யர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: