ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

முல்லை பெரியாறு 140 அடியாக குறைக்கப்படுகிறது

மாலைமலர் :முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி:கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டது.
 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுககி அணை நிரம்பியதால் உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் கேரள பகுதிக்கு கடும் வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீரும் இடுக்கி அணைக்கு வந்து சேர்வதால் இந்த அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள முதல் மந்திரி பினராய் விஜயன் வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் இரு மாநில அரசுகளும் பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து குமுளி செல்லும் மலைப்பாதையில் மண் சரிவை பார்வையிட வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-


முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு இந்த அணையில் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதாகவும், அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதில் அச்சப்பட எதுவும் இல்லை. அணை பலமாக இருப்பதாக பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பூகம்பம் ஏற்பட்டாலும் அணைக்கு பாதிப்பு ஏற்படாது. கேரள மாநிலத்தில் நம் சகோதர்கள் தான் வாழ்கிறார்கள். தமிழகம் வேறு, கேரளா வேறு என்று பிரித்துப் பார்க்கவில்லை. கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு தேனி மாவட்டத்தில் இருந்து தமிழர்கள் பலர் தன்னார்வலர்களாக நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: