வியாழன், 2 நவம்பர், 2017

நடராஜன் வீடு திரும்பினார் ... சிகிச்சை வெற்றிகரமாக ..

tamilthehindu : மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலாவின் கணவர் நடராஜன் முழு குணமடைந்து புதன்கிழமை மாலை வீடு திரும்பினார்.
கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் கிடைக்காமல் தள்ளிப்போகவே நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது. இடையில் அவரைப் பார்க்க சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து சென்றார் சசிகலா. மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரில் கல்லீரல் கிடைக்க நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அதன்பின், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், மருத்துவர்களுடன் நடராஜன் மருத்துவமனை உடையில் உடல் மெலிந்த நிலையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
சில நாட்கள் கழிந்த நிலையில் இன்று நடராஜன் மருத்துவர்களுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நடராஜன் வழக்கமாக அணியும் உடையுடன் மருத்துவர்களுடன் நின்றபடி காட்சி அளிக்கிறார்.
இது குறித்து விசாரித்த போது அவர் பூரண நலம் பெற்று புதன்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிச் சென்றதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: