புதன், 1 நவம்பர், 2017

கிரானைட் மோசடி... துணை போகும் எடப்பாடி! - சமாதி ஆக்கப்பட்ட சகாயம் கமிஷன்

விகடன் : ஈ.ஜெ.நந்தகுமார் வீ.சக்தி அருணகிரி: ஈ.ஜெ.நந்தகுமார் 
கிரானைட் மோசடியை விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் விசாரணை கமிஷனை ஊத்திமூடும் வேலையில் இறங்கிவிட்டது எடப்பாடி அரசு. கிரானைட் மோசடிக்காரர்கள் சொன்ன கருத்துகளையே அரசும் சொல்லியிருப்பதன் மூலம், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது உறுதியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த கிரானைட் குவாரிக் கொள்ளைக்கு, மதுரை கலெக்டராக இருந்த சகாயமும், அன்சுல் மிஸ்ராவும் முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதிரடி நடவடிக்கையாக, முறைகேடான குவாரிகள் சீல்வைக்கப்பட்டன. பி.ஆர்.பி உள்பட முக்கிய கிரானைட் புள்ளிகள் சிறைக்குப் போய்வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான், ‘கிரானைட் மோசடியை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் டிராஃபிக் ராமசாமி. இதில்தான் சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது நீதிமன்றம். மதுரையில் ஒரு வருடத்துக்கும் மேல் தங்கி, பல ரிஸ்க்குகளை எதிர்கொண்டு, விசாரணையை நடத்தி முடித்தார் சகாயம்.

‘கிரானைட் மோசடிக்காரர்களால் 1,11,000   கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கிரானைட் மோசடியை இன்னும் முழுமையாக கண்டுபிடிக்க சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்’ எனத் தனது முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார் சகாயம். ‘இந்த அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ எனப் பாதிக்கப்பட்ட மக்களும், எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தபோதும், தமிழக அரசு தொடர்ந்து தாமதித்து வந்தது. இந்த நிலையில்தான், சகாயம் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். பதில் மனுவில், ‘கிரானைட் மோசடி பற்றி விசாரணை அதிகாரி சகாயம் குழு அளித்த 212 பரிந்துரைகளில் 131-ஐ அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. சட்ட வரம்புக்கு அப்பாற்பட்ட 67 பரிந்துரைகளை நிராகரித்துள்ளோம். கிரானைட் மோசடியால் அரசுக்கு 1,11,000   கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தவறாக மதிப்பீடு செய்துள்ளார் சகாயம். கிரானைட் விலை அவ்வப்போது மாறும். அதைக் கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு கன மீட்டர் கிரானைட் 1,200 அமெரிக்க டாலர் என சகாயம் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவ்வளவு விலைக்குப் போகாது. அடிக்கடி விலை மாறுபடும். அடுத்து, கிரானைட் மோசடி சம்பந்தமாக அரசு, தொடர் நடவடிக்கை எடுத்துள்ளது. பி.ஆர்.பி உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால், இந்த மோசடிகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. அரசு அதிகாரிகள் மோசடிக்கு உடந்தையாக இருந்தனர் என சகாயம் குறிப்பிட்டதற்கு எந்த ஆதரமும் இல்லை. அதனால், அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க முடியாது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
145 பக்கங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரசின் இந்தப் பதில், சுற்றி வளைத்துச் சொல்வது ஒன்றைதான். ‘சகாயம் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்களுக்கு நடவடிக்கை எடுக்க மாட்டோம்’ என்பதுதான். ‘‘இப்படியான பதிலை அரசு தாக்கல் செய்திருப்பதில் ஆச்சர்யமில்லை’’ என்கிறார்கள் கிரானைட் மோசடியை எதிர்த்து வரும் சமூக ஆர்வலர்கள். ‘‘சகாயம் கமிஷன் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டபோதே, அதை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை.  தமிழக அரசை எச்சரித்து, 10,000 ரூபாயை அபராதமாக நீதிமன்ற விதித்த பிறகுதான் வேறுவழியில்லாமல் விசாரணைக்கு ஒப்புதல் அளித்தது. ஆனாலும், சகாயம் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணித்தார்கள். விசாரணையில் உதவுவதற்காக சகாயம் கேட்ட அதிகாரிகளைத் தராமல் இழுத்தடித்தார்கள். விசாரணைக் குழுவின் செலவுக்குக்கூட அரசு, பணம் வழங்காமல் டபாய்த்தது. அதிகாரிகளிடம் கேட்ட தகவல்கள் தரப்படவில்லை. இதனால்தான் விசாரணை தாமதமானது என நீதிமன்றத்திலேயே சொன்னார் சகாயம். ‘இயற்கை வளங்களைக் குவாரி உரிமையாளர்கள், கொள்ளையடித்து விட்டனர். அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. சகாயம் குழுவுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம். அப்படி முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்ப்பீர்கள். சுப்ரீம் கோர்ட் காட்டிய வழியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடைசெய்துவிடுவோம்’ என அன்றைக்கு தலைமை நீதிபதியாக இருந்த கவுல் சாட்டையடி கொடுத்தார். இப்படி ஆரம்பத்திலிருந்தே சகாயம் கமிஷனை அரசு விரும்பவில்லை. அதன் வெளிப்பாடு இப்போதும் தொடர்கிறது.
குவாரிக் கொள்ளையர்களுடன் அரசு இணக்கமாகிவிட்டது. இன்று அமைச்சரவையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் பி.ஆர்பி-யுடன் நெருக்கமாக இருந்தவர்கள். குறிப்பாக, பி.ஆர்.பி-யுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகநெருக்கமாக இருந்தார். சேகர் ரெட்டி, பி.ஆர்.பி போன்றவர்களுடன் பன்னீர்செல்வம் நெருக்கமாக இருப்பது ஊரறிந்தது. அப்படிப்பட்டவர்கள் சகாயம் அறிக்கையை எப்படி அமல்படுத்துவார்கள்? ஆளும் அ.தி.மு.க இப்படியென்றால், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசும் கிரானைட் புள்ளிகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. தமிழகத்தில் இருக்கிற  பி.ஜே.பி-யினர், மீடியேட்டர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். மதுரையில் கிரானைட் வழக்கில் ஆஜராகிவரும் அரசு வழக்கறிஞர் ஷீலாவை மாற்றச்சொல்லி மதுரை கலெக்டர் வீரராகவராவுக்குச் சமீபத்தில் அழுத்தம் கொடுத்தனர். கிரானைட் மோசடி வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கிரானைட் புள்ளிகளுடன் விழாக்களில் அகமகிழ்ந்து வருகிறார் கலெக்டர் வீரராகவராவ்’’ என்று கொந்தளிக்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
கிரானைட் கொள்ளைக்கு எதிராகப் போராடி வரும், வழக்கறிஞர் எட்டிமங்கலம் பி.ஸ்டாலின் நம்மிடம், ‘‘அதிகாரிகள் தவறு செய்யவில்லை என அரசே கூறுகிறது என்றால், ‘கிரானைட் மோசடிக்காரர்களும் தவறு செய்யவில்லை’ எனச் சொல்லிவிட்டு போகலாமே. எந்த மோசடியும் நடக்கவில்லை. எல்லாம் ஒரு கனவுதான் என அறிவித்து விடலாமே. அதிகாரிகளின் துணையில்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்கவே வாய்ப்பில்லை. கிரானைட் புள்ளிகளுக்குக் கொள்ளையடிக்க புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்ததே அதிகாரிகள்தான். அவர்களைக் காப்பற்றுவதற்காகதான் இந்தப் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த வருவாய்த் துறை, சுரங்கத் துறை, டாமின், காவல் துறை, துறைமுகத் துறை, சுங்கத் துறை அதிகாரிகள் என அனைவரையும் காப்பாற்றியதோடு கிரானைட் மோசடிக்காரர்களுக்கும் துணை போயிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்’’ என்றார் வேதனையுடன்.

கிரானைட் மோசடிக்காரர்களுடன் ஆட்சியாளர்கள் கைகோத்துள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் எஞ்சி நிற்கும் மலைகளும் தப்புமா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. ‘‘இது, மக்கள் விரோத அரசுதான்’’ என்பதை மணிகொரு தடவை மணி அடித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறது மங்குனி அரசு.

- செ.சல்மான்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்

கருத்துகள் இல்லை: