சனி, 4 நவம்பர், 2017

நிவாரணப் பணிகளில் அரசு தோல்வி!

minnambalam :மின்சாரக் கசிவு சார்ந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (நவ.3) விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றத் தமிழக அரசு தவறியது கண்டிக்கதக்கதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கலியபெருமாள் என்ற விவசாயி, அவரது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றச் சென்ற போது மழை நீரில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். தமிழகத்தில் கடுமையாக மழை பெய்துவருவதும், மழை காரணமாக ஏற்பட்ட மின்கசிவில் சிக்கி சென்னையில் இரு சிறுமிகள் உயிரிழந்ததும் மின் வாரியத்திற்குத் தெரிந்திருக்கும்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே மின் கம்பிகளின் உறுதித் தன்மையை மின் வாரியம் சோதனை செய்திருக்க வேண்டும். ஒருவேளை பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், அடுத்த நிமிடமே மின்தடை ஏற்படும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தவறிவிட்டது எனத் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று மின்சாரக் கசிவு சார்ந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசும், மின் வாரியமும் படுதோல்வியடைந்துவிட்டன என விமர்சித்துள்ள ராமதாஸ் இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இனியாவது இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கலியபெருமாளின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனத் தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: