திங்கள், 30 அக்டோபர், 2017

அன்புமணி : நடிகர்கள் செய்வது மட்டும்தான் உங்களுக்கு செய்தியா!

கமல் குறித்த கேள்வி: ஊடகங்களைச் சாடிய அன்புமணிமின்னம்பலம் : நடிகர்கள் செய்வது மட்டும்தான் உங்களுக்குச் செய்தியா என ஊடகவியலாளர்களிடம் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை கமல் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தது தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அன்புமணி, “ஒரு நடிகர் போனால் மட்டுமே உங்களுக்குச் செய்தியாக உள்ளது. மற்றவர்கள் செல்வது தெரியவில்லையா” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
எண்ணூர் அனல் மின் நிலையக் கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்படுவதால் வட சென்னையின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. கொசஸ்தலை ஆற்றை மீட்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்து வரும் நிலையில், நடிகர் கமல் சமீபத்தில் நேரிடையாகவே சென்று கொசஸ்தலை ஆற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொசஸ்தலை ஆறு தொடர்பாக எத்தனையோ ஆய்வுகளைத் தான் மேற்கொண்டதாகக் கூறிய அவர், கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
கொசஸ்தலை ஆறு எங்கெல்லாம் பாய்கிறது, இதன் மூலம் எத்தனை பேர் பாசன வசதி பெறுகின்றனர் என்பது குறித்து தீவிர ஆய்வு செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
“எண்ணூர் பிரச்சினை, ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும், அனல் மின் பிரச்சினை தொடர்பாகவும் பல முறை குறிப்பிட்டுள்ளேன். சினிமா நடிகர் செல்லும்போது மட்டும் பரபரப்பு ஆகிவிடுகிறதா?” என கேள்வி எழுப்பிய அவர், சினிமா நடிகர்கள் செல்வது மூலம்தான் இத்தகைய பிரச்சினைகள் செய்தி ஆகின்றன என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து எனத் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை: