புதன், 26 ஜூலை, 2017

திமுக மனித சங்கிலிக்கு அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்!

திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, மனித சங்கிலிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் கூட்டணிக் கட்சிகளும் வேறு சில கட்சிகளும் பங்கேற்பதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை நீதிபதி அமர்வின் முன்பு, இந்த மனித சங்கிலி போராட்டம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது என்றும், இந்த போராட்டத்தால் பணிக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என முறையிட்டு, இதனை அவசர வழக்காக விசாரிக்கக் கோரினர்.
இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் வழக்கறிஞர், திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்ததையடுத்து தடை விதிக்கக் கோரிய மனுவை, விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
அப்போது, அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் எவ்வாறு போராட்டத்திற்கு தடை விதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நக்கீரன்

கருத்துகள் இல்லை: