திங்கள், 24 ஜூலை, 2017

எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி!


எடப்பாடி அணியில் இணைந்தார் ஆறுக்குட்டி!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தன்னைப் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டை வைத்து வெளியேறிய ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக அணிகள் இரண்டாகப் பிரிந்தபோது பன்னீர்செல்வம் அணிக்குத் தனது ஆதரவை முதலில் தந்தவர் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி. ஆனால், கடந்த ஜூலை 21ஆம் தேதி ஓ.பி.எஸ். அணியினர் தன்னைப் புறக்கணிப்பதாகக் கூறி அவரது அணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 23ஆம் தேதி) சேலத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற ஆறுக்குட்டி எம்.எல்.ஏ., எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அதிமுக அணிகள் இரண்டாகப் பிரிந்தபோது தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தேன். ஆனால், அங்கு நான் புறக்கணிக்கப்பட்டு வந்தேன். ஓ.பி.எஸ். அணியின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்புத் தரவில்லை. தொகுதிக்குத் திட்டங்களை அறிவித்த முதல்வருக்குப் பேரவையில் நன்றி தெரிவித்த ஒரே காரணத்துக்காக என்னை ஒதுக்கி வந்தனர்.
எனது கவுண்டம்பாளையம் தொகுதிக்கு முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது. தற்போது ஓ.பி.எஸ். அணியில் ராஜமாணிக்கம் -மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி; மனோரஞ்சிதம் -கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி; மனோகரன் - நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி; சண்முகநாதன் -தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி; மாபா பாண்டியராஜன் - ஆவடி சட்டமன்ற தொகுதி; மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. சின்னராஜ், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. செம்மலை உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: