செவ்வாய், 25 ஜூலை, 2017

சந்திரபாபு நாயுடு தரக்குறைவாக மக்களை மிரட்டினார் .. நான் முதல்வர் என்னை கேள்வியா கேட்கிறாய்?

நந்த்யாலில் பொதுக்கூடத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் சாதனைகளை விளக்கிய பொதுக்கூட்டம் ஒன்றில் எதிர்த்துக்கேள்வி கேட்ட இரண்டு பேரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அச்சுறுத்தியதால் பரபரப்பானதோடு, பலத்த கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.
கர்நூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலா தொகுதியில் இச்சம்பவம் நடந்தது. இத்தொகுதியில் தன் ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசி வந்த சந்திரபாபு நாயுடு கிராமப்புற பகுதிகளில் மின்சார விநியோகம் குறித்து பெருமையாகப் பேசினார். அப்போது ஒரு நபர் தான் குடியிருக்கும் பகுதியில் மின்சார சப்ளை அவ்வளவு சீராக இல்லையே என்று புகார் தெரிவித்தார், இதில் ஆத்திரமடைந்த முதல்வர், “மின்சாரம் வரவில்லை என்று என்னிடமே கூறுகிறாயா? உங்களுக்கு கண் இல்லையா? உங்களால் பார்க்க முடியவில்லையா என்ன?” என்றார் கோபமாக.

இதோடு மட்டுமலாமல், “எந்தக் கட்சியிலிருந்து வருகிறாய்? ஒய்.எஸ்.ஆர். கட்சியா? யார் உன்னை இங்கு அனுப்பியது? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? குடித்திருக்கிறாயா?
நான் முதல்வர், என் மக்கள் முன்னால் என்னையே கேள்வி கேட்கிறாயா? வேறொரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் வீட்டிலேயே இருங்கள், என் கூட்டத்திற்கு வராதீர்கள்.
இது மட்டுமல்ல...
இன்னொரு நபர் தனக்கு விவசாயக் கடன் தள்ளுபடிச் சலுகைக் கிடைக்கவில்லை என்று புகார் அளித்தார், இவரிடமும் ஆத்திரமடைந்த சந்திர பாபு நாயுடு, “நீ என்ன குடித்திருக்கிறாயா? நான் உன் இடத்துக்கு கலெக்டரை அனுப்பி விவரங்களைச் சரிபார்ப்பேன். உன் தகவல் பொய்யாக இருந்தால் உன்னை புக் செய்வேன்”
என்று கடுமையாக கோபாவேசமடைந்துள்ளார்.
கடந்த மாதத்தில் இதே தொகுதியில் நாயுடு, “தெலுங்கு தேசத்துக்கு வாக்களிக்கவில்லையெனில் அரசு சேவைகளை பெற வேண்டாம். எங்களுக்கு வாக்காளிக்காத எந்த ஒரு கிராமத்தையும் புறக்கணிக்கத் தயங்க மாட்டேன்” என்று பேசியது கடும் கண்டனத்துக்குள்ளானது.
இந்நிலையில் மீண்டும் வாக்காளர்களை அவமதிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.  tamilthehindu

கருத்துகள் இல்லை: