திங்கள், 3 ஜூலை, 2017

கோடநாடு எஸ்டேட் ஊழியர் திடீர் தற்கொலை!

கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்பரேட்டராக இருந்த தினேஷ்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினேஷ்குமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தவர். இவர் கடந்த வாரம் தனது இரு கண்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதன் காரணமாக கடந்த மூன்று தினங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மனம் நொந்து அவர் இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில், தனது லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோத்தகிரி காவல்துரையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா, “தற்கொலை செய்துகொண்ட தினேஷ்குமார் என்பவருக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடநாடு எஸ்டேட் பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை எனவும், கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் தொடர் மரணங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், இந்த தற்கொலை கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. nakkeeran


கருத்துகள் இல்லை: