செவ்வாய், 4 ஜூலை, 2017

துரைமுருகன்: விட்டால் அதிமுக வேட்டி கட்டிட்டு வந்துடுவீங்க போல இருக்கு...


டிஜிட்டல் திண்ணை: கட்சிக்கு துரோகம்; எம்.எல்.ஏ.வை வறுத்தெடுத்த ஸ்டாலின்மொபைலில் டேட்டா ஆன் செய்தோம்.
வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “திமுக எம்.எல்.ஏ.க்களை முதல்வர் தரப்பில் இருந்து விழுந்து விழுந்து கவனிப்பதை பற்றி நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன் அல்லவா?இதுவும் கூட அதன் ஃபாலோ அப்தான்.
சட்டமன்றத்தில் மதுராந்தகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசும் போது, ‘மாண்புமிகு அம்மா அவர்களின்... என்று தன் பேச்சைத் தொடங்கி இருக்கிறார். இதைக் கேட்டு திமுகவினர் அதிர்ந்துவிட்டார்களாம். அதிமுகவினரும் இதை வியப்போடு பார்த்திருக்கிறார்கள்.
பேரவை முடிந்ததும் புகழேந்தியை அழைத்த துரைமுருகன், ‘என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. அம்மான்னு பேசுறீங்க? விட்டால் அதிமுக வேட்டி கட்டிட்டு வந்துடுவீங்க போல இருக்கு...’ என கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு புகழேந்தி, ‘நான் எங்க அம்மாவை சொன்னேன் அண்ணே.. நீங்க ஏன் தப்பா நினைச்சீங்க..?’ என கேட்டாராம். டென்ஷன் ஆன துரைமுருகன், ‘ஆமாய்யா.. உங்க அம்மா இந்திய நாட்டு ஜனாதிபதி…. நீ அம்மான்னு சொன்னால் எல்லோரும் உங்க அம்மாவைத்தான் நினைப்பாங்க பாரு...’ என்று கடுப்படித்திருக்கிறார்.
அதன் பிறகு ஸ்டாலினும் புகழேந்தியை வறுத்தெடுத்திருக்கிறார். ‘எல்லோரும் என்ன செஞ்சிட்டு இருக்கீங்க.. ஏன் இப்படி பேசுறீங்கன்னு எனக்குத் தெரியும். கட்சித் தலைமைக்கு துரோகம் பண்ணாம, கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்க...’ என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலோனோருக்கு இப்போது அதிமுக பாசம் அதிகமாகிக் கொண்டே வருகிறதாம். காரணம், முதல்வர் போட்ட திடீர் உத்தரவுதான். நெடுஞ்சாலை துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை. தமிழ்நாடு முழுக்க நெடுஞ்சாலை துறையில் எந்த காண்ட்ராக்ட் என்றாலும், அது அந்தத் தொகுதி திமுக எம்.எல்.ஏக்களுக்கு தெரியாமல் நடக்க கூடாது. அவர்களுக்கு போக வேண்டியது போய் சேரணும் என உத்தரவிட்டிருக்கிறாராம் முதல்வர். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் ரொம்பவே உற்சாமாகிவிட்டார்கள்!” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து இன்னொரு ஸ்டேட்டஸையும் அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.
’’சட்டசபையில் விவாதம் முடித்துவிட்டு, வெளியே தன் அறைக்குப் போய்க் கொண்டிருந்த திமுக கொறடா சக்கரபாணியை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். வழியில் மடக்கி, ‘அண்ணே.. எங்க கட்சியிலேயே என்னை ஒழிச்சுக்கட்டணும்னு பிளான் போடுறாங்க. அதுக்காகத்தான் உங்க கட்சி எம்.எல்.ஏக்களிடமும் பேசி எனக்கு எதிராக பேச வைக்கிறாங்க. தளபதிகிட்ட சொல்லுங்க. தயவு செய்து எனக்கு எதிராக பிரச்னை கிளப்ப வேண்டாம். நான் யாரோட ஆதரவாளரும் இல்லை. நான் உண்டு.. என் வேலை உண்டுன்னு போயிட்டு இருக்கேன். இதை நீங்க தளபதிகிட்ட சொல்லுங்க..’ என அழாத குறையாகப் பேசி இருக்கிறார். ’உங்களை குறி வெச்சுப் பேசணும்னு யாரும் பேசலை. நான் தளபதிகிட்ட பேசுறேன்..’ என்று பதில் சொல்லிவிட்டு, அறைக்கு வந்தவுடன் இந்தத் தகவலை ஸ்டாலினுக்கும் உடனே தெரிவித்துவிட்டாராம் சக்கரபாணி” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: