ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

தமிழ்ராக்கர்ஸ்.காம் இணையதளக் குழுவினர் சவால் ! திருட்டு விசிடியை ஒழிக்க டவுன் லோடு செய்யுங்கள் என்கிறார்களோ?


தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மனு தாக்கல் செய்து விஷால் அணி, தேர்தல் பரபரப்பைத் துவக்கிவைத்துவிட்டது. அதென்ன விஷால் அணி? எனக் கேட்கலாம். இன்னும் பெயர் வைக்கவில்லையென மனு தாக்கல் செய்துவிட்டு வெளியேவந்த விஷால் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்.
நடிகர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நீங்களே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமைப் பதவிக்கும் போட்டியிடுவது ஏன்? என்று கேள்வி கேட்ட நிருபருக்கு இது என் விருப்பமல்ல. இவர்கள் ஆசைப்பட்டார்கள். அதனால் நிற்கிறேன் என்று பின்னால் இருப்பவர்களைக் கைகாட்டிவிட்டார் விஷால்.


இதுவரைக்கும் வரலாற்றுலையே இல்லாத அளவுக்கு ராஜினாமா கடிதத்துல கையெழுத்து போட்டுக்குடுத்துட்டு தேர்தல்ல போட்டியிடுறது நாங்க தான் என்று மீண்டும் மீண்டும் பெருமையாக சொன்னார். தமிழ்நாட்டு முதலமைச்சரே அந்த நிலைமையில் தான் இருக்கிறார் என்று விஷாலுக்கு யாராவது சொல்லியிருக்கலாம். ஆனால், விஷால் தலைமையிலான அணி பொதுப்பிரச்னைகளில் தலையிடாதே என்று வாதத்தை முன்வைத்திருக்கலாம், அவர் இடம்பெற்றிருக்கும் நடிகர் சங்கம் ஜல்லிக்கட்டுக்காக போராடாமல் இருந்திருந்தால். தயாரிப்பாளர்கள் மத்தியிலும் இதே பேச்சு தான் சுற்றிவருகிறது.
இந்த முடிவை விஷால் பெருமையாக பேசியிருக்கலாம். ஆனால், வேறு அணி போட்டியிடுகிறது எனத் தெரிந்ததும், தாக்கல் செய்யப்பட்ட நாமினேஷன் மூலமாக ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் கொடுத்தவர்கள் மீண்டும், ஒரு வருடத்தில் நாமினேஷனுக்கு பணம் செலுத்த வேண்டுமா? என அசதியாகிறார்கள். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி கொடுத்த வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்போது குறிப்பிட்டார். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்துமே, நடிகர் சங்கக் கட்டிடத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தக் கட்டிடத்தைக் கட்டி, அதை வாடகைக்கு விட்டு, அதன்மூலம் வரும் பணத்தைக் கொண்டு நலிந்த, மெலிந்த நடிகர்களுக்கு உதவுவதாகச் சொன்னதை நிறைவேற்றினால் தான் 50% வாக்குறுதிகள் பூர்த்தியாகும்.

இவற்றைச் சொன்னபோது ஞானவேல் ராஜா ஆன்லைன் திருடர்களை ஒழிப்பதைப் பற்றிப் பேசினார். சமீபத்தில் அவர் தமிழ்ராக்கர்ஸ்.காம் என்ற இணையதளம் புதுப்படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்வதைப் பற்றி ஆக்ரோஷமாகக் கெட்டவார்த்தையைப் பயன்படுத்திப் பேசினார். தயாரிப்பாளர் சங்கத்தினாலோ அல்லது காவல்துறையாலோ... ஏன் சைபர் கிரைம் மூலமாகவோ இந்த சம்பவம் சாத்தியமா என்றால், இதற்கான வாய்ப்பு பூஜ்ஜியத்தில் நிற்கிறது.
தமிழ்சினிமாவுக்கு மட்டுமான பிரச்னையாக இதைப் பார்ப்பதால் தான் ஞானவேல்ராஜா இத்தனை ஆக்ரோஷப்படுகிறார். இந்தியாவையும் தாண்டிய ஒரு பிரச்னையாக இதைப் பார்க்கவேண்டும். கடந்தவருடம் மத்திய அரசு ஒரு திடீர் அரசாணையைப் பிறப்பித்தது. அது, குறிப்பிட்ட ஆபாச இணையதளங்களை இந்தியாவில் தடை செய்வது என்பது தான். ஆனால், இப்போது அவற்றின் நிலை என்ன? ராஜபோகமாக ரசிகர்களைக் கவர்வதற்கு புதுப்புது வீடியோக்களை அவை அப்லோடு செய்துகொண்டுதான் இருக்கின்றன. வல்லரசுகளினால் அமைக்கப்பட்ட சைபர் ஹீரோக்கள் அடங்கிய குழுக்கள், இதுபோன்ற ஆன்லைன் திருடர்களைத் தேடிவருகிறது. ஆனால், அவர்கள் யாரையும் பிடிக்கமுடியவில்லை. அந்த இணையதளங்களை முடக்கவும் முடியவில்லை. ஏன், வேற்றுநாட்டவர்களை அனுமதிக்காத அமெரிக்க அதிபர் டிரம்பினால் கூட இந்த இணையதளங்களை ஒன்றும் செய்யமுடியாது.

பிறகு என்னதான் செய்வது? தயாரிப்பாளர்களின் லாபத்தில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு கைகட்டி நிற்கவேண்டுமா? என்று கேள்வி கேட்டால் அது அபத்தம்.
எவ்வகையிலும் மற்றவர் உழைப்பை உறிஞ்சுவதை அனுமதிக்கவே முடியாது.
மேற்சொன்ன வாசகம் ஆன்லைன் திருடர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கும் பொருந்தும். ஒரு படத்தை, அதன் தன்மையால் ஒரு வாரம் வரைக்கும் ரசிகனைப் பேசவைக்கவேண்டும். ஆனால், மாறாக போன வாரம் படத்துக்கு போய்ட்டு வந்ததால செலவு கையைக் கடிக்குது என்று பொதுமக்கள் புலம்பும் நிலை மாறினால் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை தானாகவே மாறும். ஒரு படம் பார்க்க வந்ததற்காக பார்க்கிங் முதல் 3D கண்ணாடி வரை அநியாயப் பணத்தைப் பிடுங்குவது எந்தவகையில் நியாயம். கடந்த சில வருடங்களில் விலை ஏற்றம் அடையாதது சினிமா டிக்கெட் மட்டும்தான் என்று மார்தட்டலாம். அதேசமயம் தமிழ்சினிமாவும் வளர்ச்சியடையவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டுமல்லவா? மேற்சொன்னவையெல்லாம், குறிப்பாக விஷால் அணியை எதிர்க்கவேண்டுமெனச் சொல்லப்பட்டவையல்ல. ஆன்லைன் திருடர்களைப் பற்றி சினிமாத் துறையினர் பேசும்போது, பொதுமக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் இவை. சரி இப்போது ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம்.

உலக சினிமா அரங்குகளில் ரஷிய திரைப்படங்களுக்கென தனி மரியாதை உண்டு. அத்தனை பலமான கதைகளைக் கொண்டது ரஷிய திரையுலகம். ஆனால், ரஷிய நாட்டில் இந்தப்படங்களுக்கு ஆதரவு கொஞ்சமும் இருக்காது. காரணம், மூன்று பேர் அடங்கிய ஒரு குடும்பம் ஒரே ஒரு சினிமா பார்ப்பதற்கு ஆகும் செலவு 3,500 ரூபெல்கள். இந்திய மதிப்புப் படி 3986 ரூபாய். எங்கே போகிறது கணக்கு தெரிகிறதா? இந்தியாவில் அதே மூன்று பேர் படம் பார்த்துவிட்டு வர ஆகும் செலவு 1500 ரூபாய். தமிழ்சினிமா எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது எனப் புரிகிறதா?
உதாரணத்துக்கு ரஷியா வரை செல்லவேண்டாம். இதோ இருக்கிறது கேரள மாநிலம். தமிழ் சினிமாவின் முதல் ஸ்டூடியோ(சென்ட்ரல் ஸ்டூடியோ) அமைந்த கோயமுத்தூருக்கு அருகிலேயே இருக்கிறது கேரளா. ஒரு காலத்தில் ஆபாசப் படங்கள் என்றாலே, மலையாளத் திரையுலகத்தைக் கைகாட்டிய இதே சமூகம், ஒரு நல்ல மலையாளப் படம் பார்க்கவேண்டுமென்றால் தியேட்டருக்குத் தான் செல்லவேண்டும். ஆன்லைனில் டவுன்லோடு செய்ய கூகிளில் தேடித் தேடி, கூகிளே களைத்துப் போன பிறகு தான் ஆன்லைன் அப்லோடிங் செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே இரண்டாவதாக அதிக பணம் சேரும் தமிழ்சினிமாவினால் சாதிக்க முடியாததை மலையாளத் திரையுலகம் எப்படி சாதித்தது? என்ற கேள்வியைப் பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லாத நிலையில் சுலபமாக ஆன்லைன் திருடர்களைக் கட்டுப்படுத்திவிட முடியுமா?

ஞானவேல் ராஜாவின் பேச்சுக்கு, தமிழ்ராக்கர்ஸ்.காம் இணையதளக் குழுவினர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். ஞானவேல் சார். சிங்கம் 3 வெளியாகும் பிப்ரவரி 9ஆம் தேதி உங்களுடைய நாள் இல்லை. எங்களுடைய நாள் என்று அரைகூவல் விடுத்திருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறார் ஞானவேல் ராஜா? தமிழ்நாட்டில் திரையிடும் முன்பே சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் திரையிடப்படும் காட்சிகளிலிருந்து திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து அப்லோடு செய்பவர்களை எப்படி புழல் சிறையில் அடைப்பார்கள்? சாத்தியம் தான். இயக்குநர் ஹரி, சிங்கம் 4 திரைப்படத்தில் சூரியாவை அமெரிக்காவுக்கு அனுப்பி திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைக்கலாம்.
இது அவரை கலாய்க்க நினைத்துச் சொல்வதல்ல. உண்மை அது தான். தயாரிப்பாளர்களின் சங்கத்தையோ, அரசாங்கத்தையோ நம்பாமல் மக்களின் மீது நம்பிக்கை வைத்து தியேட்டர் டிக்கெட் முதல் அனைத்து செலவுகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தால் மக்கள் படங்களைக் கொண்டாடுவார்கள். அப்போதும் மீதம் பிடித்த பணத்தை, இரண்டாவது முறையாகப் படம் பார்த்து உங்களிடமே தான் கொடுப்பார்கள் ஞானவேல் ராஜா.
-சிவா

கருத்துகள் இல்லை: