ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜி. கார்ல் மார்க்ஸ் :இப்போது சென்னையில் நடந்திருப்பதைப் போன்ற கப்பல் விபத்தும் அதன் விளைவாக கடலில் எண்ணெய் கசிவதும் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது தானா?
ஆமாம். இத்தகைய
விபத்துக்கள் நடக்கக்கூடியவைதான்.
கசிந்திருக்கும் எண்ணெயில் உயிருக்கு ஆபத்தான H2S போன்ற வாயுக்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும், அதனால் எந்த எண்ணையை அப்புறப்படுத்த முயல்வது உயிருக்கு ஆபத்தானது என்றும்
சொல்லப்படுகிறதே உண்மையா?
கசிந்திருப்பது அத்தகைய எண்ணெய் இல்லை என்பதுதான் இப்போது வெளிவந்திருக்கும் தகவல். அத்தைகைய வாய்ப்பு இருக்குமென்றால், அரசு இவ்வளவு மெத்தனமாக இருக்காது. மொத்த இடத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பார்கள். இந்த சம்பவத்தையே முடிந்த அளவுக்கு ரகசியமாக கையாண்டிருப்பார்கள். மீனவர்களை விடுங்கள்; துறைமுகத்துக்கு எதுவும் பங்கம் வந்துவிடாமல் இருக்க அரசு வேகமாக செயல்படும். சிறிய அளவிலான அணுக்கசிவின் போதெல்லாம் அரசு அப்படித்தான் நடந்துகொள்கிறது.
மற்ற நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகளில் இத்தகைய விபத்துக்களின்போது மக்கள் சென்று சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவது உண்டா?

உண்டு. அத்தகைய நாடுகளில் மக்களுக்கு பாதிப்பு இல்லையென்று உறுதி செய்தபிறகு, அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் அரசு இதை அனுமதிக்கும். பெரும்பாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களே அதில் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு இத்தகைய விஷயங்களில் குறைந்தபட்ச பயிற்சி இருக்கும்.
இப்போது வாளியுடன் களத்தில் இறங்கியிருக்கும் பொதுமக்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இதற்குப் பெயர் ‘Mental Masturbation’. இதுவொரு நோயாக நமது சமூகத்தில் வளர்ந்து வருகிறது. யாருக்கும் பிரச்சினை இல்லாத, எந்த அரசியல் கோரிக்கையும் இல்லாத ஒரு செயலில் தம்மை இணைத்துக்கொள்வதன் மூலம், தமது குற்றவுணர்ச்சியில் இருந்து வெளியேற முயலும் ஒருவித மொன்னைத்தனம். தனது கருணையின் மீது தானே மையல் கொள்ளும் போதையும் கூட இது. இதனால் பெரிய பாதகம் ஒன்றும் இல்லை.
மக்கள் வாளிகளுடன் களத்தில் இறங்கியிருக்கக் கூடாது என்கிறீர்களா?
இறங்கலாம். அதெல்லாம் மக்களைக் குறைந்த பட்சம் மனிதர்களாகவாவது பார்க்கும் மேற்கு நாடுகளில் மட்டும். அங்கு வாளியுடன் பொது மக்கள் சுத்தப்படுத்த இறங்குவார்கள்; அதே சமயம் கழிவைக் கொட்ட வரும் கப்பலை மறித்து நடுக்கடலிலும் கூட போய் போராடுவார்கள். ஒரு சிவில் சமூகத்தின் போராட்டத்தை அதே கண்ணியத்தோடு அரசும் எதிர்கொள்ளும். போராட்டக்கார்களோடு உரையாடலை மேற்கொள்ளும். லத்தியால் அடிக்காது. முக்கியமாக, அவர்களது போராட்டம் முடிந்தவுடன், கடற்கரையை ஒட்டிய மக்களின் வீட்டை இடிக்காது.
ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்.
photo: Venkat Angamuthu  thetimestamil.com

கருத்துகள் இல்லை: