புதன், 27 ஜூலை, 2016

ஐசிசி-யின் ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் முத்தையா முரளிதரன்.. முதல் தமிழன்

ஐசிசி-யின் ‘ஹால் ஆப் ஃபேம்’ பட்டியலில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்தான். மேலும், இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழரும் இவர்தான். முரளிதரனை ஹால் ஆப் ஃபேமில் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது. அவர் தவிர, மேலும் 3 கிரிக்கெட் ஜாம்பவான்களும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலியாவின் ஆர்த்தர் மோரிஸ், கரேன் ரோல்டன் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் லோஹ்மான் ஆவர். இதில் கரேன் ரோல்டன், 1997 மற்றும் 2005ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்தவர் ஆவார். இவர்களை விரைவில் நடைபெறவுள்ள விழாவில் கெளரவப்படுத்தவுள்ள ஐசிசி, ஹால் ஆப் ஃபேம் தொப்பியையும் பரிசாக அளிக்கும்.இந்த நிகழ்ச்சியில் லோஹ்மான் மற்றும் மோரிஸ் சார்பாக அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக முரளிதரன் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். இதற்குமுன்பு நான்கு இந்தியர்கள் தங்கள் சாதனைக்காக இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர்.
<>அவர்கள் ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட்டில் 1560 விக்கெட் எடுத்த பிஷன்சிங் பேடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகள் வீழ்த்திய கபில்தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை முதலில் கடந்த சுனில் கவாஸ்கர், இவர்கள் மூவரும் 2009ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். பின்னர் 6 வருடங்கள் கழித்து 2015ஆம் ஆண்டு, 337 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்தமைக்காக அனில் கும்ப்ளே இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam.com

கருத்துகள் இல்லை: