வெள்ளி, 29 ஜூலை, 2016

மஞ்சள் பத்திரிகை’: தி டைம்ஸ் தமிழுக்கு லீனா மணிமேகலையின் ‘பாராட்டு’

எழுத்தாளர் ப்ரேம் மீது நடத்திய நிகழ்த்திய ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கையை தி டைம்ஸ் தமிழ் வெளியிட்டது. லீனாவின் ஆணவத் தாக்குதல் எத்தகைய தருணத்தில், எப்படி வெளிப்பட்டது என்பதையும் தி டைம்ஸ் தமிழ் ஆவணப்படுத்தியிருக்கிறது. முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இடம் பெறும் விவாதங்கள், சர்ச்சைகளை ஒட்டி ஊடகங்கள் செய்தியாக்குவது உலகம் முழுக்கவும் நடைமுறையில் இருக்கிறது. சமூக ஊடகங்களில் எழுதப்படும் பதிவு குறித்து, தொடர்புடைய பிரபலத்திடம் கருத்து கேட்டு வாங்கிப் போடுவது அவசியம் கருதி செய்வதோ, தவிர்ப்பதோ சூழ்நிலையைப் பொறுத்து ஊடகங்கள் செய்கின்றன. அர்னாப் கோஸ்வாமி குறித்து பர்கா தத் கருத்து தெரிவிக்கும் முகநூல் பதிவு செய்தியாகிறது.
இதுகுறித்து மேலதிக செய்திகளைக் கொடுங்கள் என்று கேட்டு ஊடகங்கள் காத்திருப்பதில்லை. அதுபோல ஏராளமாகச் சொல்லலாம். சமூக ஊடகத்தில் விவாதிக்கப்படும், வைரலாகும் செய்திகளுக்கென்றே தனித்த இணையதளத்தை நடத்துகிறது இண்டிபெண்டண்ட் இதழ்.

இதையெல்லாம் லீனா மணிமேகலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய அறியாமைக்காக மன்னித்துவிடுவோம்.
தி டைம்ஸ் தமிழ் மேல் அவர், ‘மஞ்சள் பத்திரிகை’ என்னும் முத்திரையைக் குத்துகிறார். அவருடைய கவிதைகளை சிலர் ‘மஞ்சள் கவிதைகள்’ என முத்திரை குத்துவதற்கும் அவர் நம் மீது ‘மஞ்சள் பத்திரிகை’ என முத்திரை குத்துவதற்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.
லீனா போன்ற விளம்பர விரும்பிகளின் சொல்லாடல் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதற்காகவே இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி? என்ற பதிவை ஆவணப்படுத்தினோம். எங்களைக் கூர்ந்து நோக்கிவரும் வாசகர்களுக்கு இது புரியும் என நினைக்கிறோம். இன்று வெகுஜென ஊடகங்களில் தலித் குறித்த ஒடுக்குமுறைகள் பதிவாகிறதென்றால் அதற்கான முன்னெடுப்பைச் செய்தது தி டைம்ஸ் தமிழ். எங்கள் இணையதளத்தின் பதிவுகள் வெகுஜென ஊடகங்களில் பேசுபொருள் ஆகியிருக்கின்றன; ஆகின்றன. தினமணியின் ‘கபாலி’ பட விமர்சனத்தில் கிளர்ந்தெழுந்த சாதிய வன்மத்தை முதன்முதலில் கண்டித்தது நாங்கள்தான். எங்களுடைய கண்டனப் பதிவு சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அதுபோல தொடர்ந்து தலித், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகளை ஆவணப்படுத்தி வருகிறது தி டைம்ஸ் தமிழ். இதெல்லாம் போராளி லீனா மணிமேகலை அறிய வாய்ப்பில்லை. இதெல்லாம் அறிந்திருந்தால் அப்படியான வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்க மாட்டார்.
சதா கருத்து சுதந்திரத்துக்காகவும் தன் எழுத்துக்கு எதிராக எழும் குரல்களை எதிர்த்தும் போராடி வரும் லீனா மணிமேகலை, ஒரு மாற்று ஊடகத்தை, அதிகாரப் பின்னணியில்லாத ஊடகத்தை மிரட்டி தன்னுடைய மேட்டுக்குடித்தனத்தை நிலைநாட்டப் பார்க்கிறார். இந்த உருட்டல், மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை. உங்களுக்குத் தேவை விளம்பரம். அதைப் போதுமான அளவு நாங்களும் தந்துவிட்டோம். இனி நீங்கள் என்ன உளறிக்கொண்டிருந்தாலும் அதன் மூலம் நீங்கள்தான் அம்பலமாவீர்கள்; நாங்களல்ல! ‘மஞ்சள் பத்திரிகை’ சொல்லாடலுக்காக அவதூறு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும், காத்திருங்கள்.
லீனா மணிமேகலை தனது முகநூலில் எழுதியுள்ள பதிவை வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம். லீனாவின் முகநூல் பதிவை வெளியிட்டிருக்கிறது ஒன் இந்தியா தளம். அதில் லீனாவின் கருத்தை எவரும் கேட்டு எழுதவில்லை, பதிவு அப்படியே பதிவாகியுள்ளது. இப்போது ஒன் இந்தியாவையும் லீனா அப்படித்தான் எழுதுவாரா என்ற கேள்வியையும் நாம் முன்வைக்கிறோம்.
“ஜெயலலிதாவிற்குப் பிறகு சொன்ன பொய்களையே திரும்ப பேசுவது, அவதூறு வழக்கு போடுவது, தன் “அவை மந்திரிகளை” வைத்து அறிக்கைகள் வெளியிடுவது என ரொம்ப பிசியாக இருப்பது மாலதி மைத்ரி தான். ப்ரேமும் மாலதி மைத்ரியும் தங்கள் கேவலமான நடத்தையை மறைப்பதற்கு, தங்கள் பிள்ளையை பலி கொடுப்பது கொடூரமான விளையாட்டு. இது பாண்டிச்சேரியில் இருக்கும் ரமேஷுக்கு தெரியுமா தெரியவில்லை.
எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. என் மேல் மாலதி கம்பெனி தொடுத்திருக்கும் அவதூறுகளுக்கு நான் கிரிமினல் வழக்கு தொடுத்தால், பிரேமிற்கு தான் இழப்பு.
யப்பா அதிகாரி தேவேந்திர பூபதி, கவிஞர்களோட வறுமையைப் பயன்படுத்தறது பத்தாம பொய் அறிக்கைகள்ல கையெழுத்து போட்டாவது இலக்கியவாதி ஆயிடலாம்னு நினைக்கிறது ரொம்ப தப்புக் கணக்கு!
மு.வி.நந்தினின்னு ஒரு பத்திரிக்கையாளர். இதுக்கு முன்னாடி கூட சூரியக்கதிர் ன்னு ஒரு பத்திரிக்கைக்கு வம்படியா குட்டி ரேவதியையும் என்னையும் வச்சு சர்ச்சை பண்ணாங்க. இவங்க இப்ப ஒரு இணைய இதழ் நடத்தறாங்களாம். அந்த இதழில் முகநூலில் நடக்கிற உரையாடல்களை சம்மந்தப்பட்டவங்க யார் கிட்டயும் கலந்துக்காம, தலையும் இல்லாம வாலும் இல்லாம காபி-பேஸ்ட் பண்ணி ஒட்டி இதழியல் பண்ணுவாங்களாம். இதெல்லாம் ஒரு பொழப்பு. இந்தம்மா நடத்தற மஞ்சள் பத்திரிகை லிங்க் தான் இந்த அறிக்கைக்கு சாட்சி. Puppy Shame!
மாலதி மைத்ரியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் பத்து பேர் தவிர அறிக்கையில வேற எந்த பெயரும் எனக்கு தெரியல. இதுக்கு முன்னாடி வெளியிட்ட அறிக்கையிலே கேட்காமலேயே போட்டுக்கிட்ட பெயர்களில் கூட சிலர் பொருட்படுத்தறவங்களா இருந்தாங்க. வேலை இருப்பவர்களுக்கு ஒரு வேலை. இல்லாதவர்களுக்கு பல வேலைகள். காட்டறது தான் காட்டறீங்க, பயப்படற மாதிரி பூச்சாண்டி காட்டுங்க மக்களே!
Update: அறிக்கையில் பெயர் இருந்தவர்களில் எனக்கு தெரிந்த இரண்டு பேரை விசாரித்ததில், தாமிராவிற்கு அறிக்கை குறித்த கேள்வி ஞானம் கூட இல்லை, மதியழகன் சுப்பையா அறிக்கை குறித்து இப்பொது தான் விசாரிக்க கிளம்பியிருக்கிறார். மாலதி மைத்ரி – உங்களுக்கு ஏன் இந்த வெட்கம் கெட்ட வேலை?”  thetimestamil.com/

கருத்துகள் இல்லை: