வெள்ளி, 29 ஜூலை, 2016

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் சட்டத் திருத்தம்?

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், 15 முதல் 18 வயதுடையவர்கள் செய்யக்கூடாத வேலைகள் என்ற பட்டியலில் இருந்த பல வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திருத்தம், ஏழைக் குடும்பங்கள் வருமானம் ஈட்டவும், குழந்தைகள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளவும் உதவும் என்று இந்திய அரசு கூறுகிறது. ஆனால், ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் மற்றும் நோபெல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளனர்.

இது, மேலும் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு வழிவகுக்கும் என கூறுகின்றனர். இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகளால், இச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வழி ஏற்படும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். "போதிய பாதுகாப்பு அம்சங்களை அந்த சட்டத் திருத்தத்தில் சேர்த்திருக்கிறோம் " என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், குடும்பத் தொழில்களிலும், ஆபத்தில்லாத, விளையாட்டு, கேளிக்கை உள்ளிட்ட துறைகளில் பணியாற்ற முடியும்.
இந்தியாவில் 12 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 60 மில்லியன் பேர் இருப்பதாக மற்ற தரப்பிலிருந்து கிடைக்கு்ம் தகவல்கள் கூறுகின்றன.
பள்ளி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் குடும்பத் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்த விதிவிலக்கு அளித்திருப்பதன் மூலம், வைரம் தீட்டும் தொழில், செங்கற் சூளைகள், மாமிசம் வெட்டப்படும் கூடங்கள், வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளுக்கும் பயன்படுத்த வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
புதிய சட்டம், குழந்தைகள் சரியாக பள்ளிக்குச் செல்லாமலும், பள்ளியை பாதியில் இடை நிறுத்தவும், வழிவகுக்கும் என கல்விக்கான யுனிசெப் இந்தியா அமைப்பின் தலைவர் யுப்ரேட்ஸ் கோபினா தெரிவித்துள்ளார்.  //tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: