வெள்ளி, 29 ஜூலை, 2016

ஒரு இசைக்கலைஞனுடன் பேசுவதற்கே ஜாதி தடையாக இருக்கிறது... மாக்சாசே விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா

இந்த விருது பெரும்பாலும் சிறந்த சமூக சேவைக்காக வழங்கப்படும். கர்நாடக இசையை சமுதாயத்தில் வெகுஜன மக்களிடம் எடுத்துச்சென்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற இசைக்கலைஞரான உங்களுக்கு இந்தமுறை விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களைப்போல இந்த முயற்சியைத் தொடர ஆதரவில்லாதநிலையில், இதுபற்றிய உங்கள் கருத்தென்ன? இந்த விருது உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க எவ்வாறு உதவும் என நினைக்கிறீர்கள்?
எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்துக்கான காரணம், கர்நாடக இசையையும் தாண்டிய ஒன்றாக இருக்குமென்று கருதுகிறேன். மனிதன் உருவாக்கிய சேரிகள் எனும் விலங்கை உடைத்தெறியும் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். என் நிலை வழக்கத்துக்குமாறாக இருக்கலாம். சொல்லப்போனால், இப்போது இசை ரசிகர்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவால், என் இசையின்மூலம் நான் செய்ததை நினைத்து அதீத மகிழ்ச்சியுடன் நினைக்கிறேன்.

ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். ஒரு கலைஞனுக்கு இன்னொரு கலைஞனைப் பின்தொடர வேண்டுமென்ற அவசியம் இல்லை. நானும் அந்தமாதிரியான ஒரு கலைஞனாக இருக்க விருப்பப்படவில்லை. சிறந்த காரியங்களை செய்யும் பலர் இருக்கின்றனர். நான் கேட்கும்போதெல்லாம் என் உதவிக்கு வரும் இசைக்கலைஞர்கள் பலரின் உதவியை நான் முதலில் அங்கீகரிக்க வேண்டும். என் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சிலர் இருக்கலாம். ஆனால், பலர் அமைதியாக எனக்கு பல உதவிகளையும், என் முயற்சிகளில் பங்காற்றியும் வருகின்றனர். என் வாழ்க்கை முழுதுவம் நான் நம்பிக்கைவைத்திருக்கும் கலையின் மூலமாக நான் கையிலெடுத்திருப்பதை செய்துகொண்டிருப்பேன். பேசுவேன்.
* கவனிக்கப்படாத பல திறமைசாலிகள் எல்லா சமூகங்களிலும் இருக்கின்றனர். குறிப்பாக, இசை வேளாளர்கள் தொன்றுதொட்டு இசையோடு சம்பந்தப்பட்டவர்கள். இந்த உயர் ஜாதி மக்கள் நிறைந்த இசையுலகில் கால்பதிக்க கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. அவர்களை எப்படி அணுகுவதாக உத்தேசம்?
ஆம். இசை வேளாளர் சமூகத்தில் கவனிக்கப்படாத நிறைய திறமைசாலிகள் இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கச்சேரிகளில் மீண்டும் நாகஸ்வரம் மற்றும் தவிலை கொண்டுவருவதற்கான தேவை இருக்கிறது. இதுகுறித்து சில திட்டங்கள் இருக்கின்றன. அவை எப்படி செயல்முறைக்கு கொண்டுவருகிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
* நமது மாநிலத்தில் தலித் சமுதாயத்தினரும் இசை சார்ந்து அதிகமாக இயங்குகின்றனர். தலித் மாணவர்களை உங்களால் ஈர்க்க முடிந்ததா? உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன? மற்ற சமூகத்தில் உள்ள திறமையானவர்களுக்காக நீங்கள் ஏன் ஒரு பள்ளி தொடங்கக்கூடாது?
என்னிடம் இதுவரை தலித் மாணவர்கள் இல்லை. ஆனால் நானும் சங்கீதா சிவகுமாரும் இணைந்து, சென்னையில் உள்ள நகராட்சிப் பள்ளிகளுக்குச் சென்று கர்நாடக இசையை கற்றுத் தருகிறோம். இந்த முயற்சியின்மூலம் திறமையானவர்களை அடையாளம் காணமுடியும் என நம்புகிறோம். தலித், இசை வேளாளர் என எந்த ஜாதியாக இருந்தாலும், வழிகாட்டுதலின் தேவை இங்கு அதிகமாக இருக்கிறது. இசையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு பிறகு, எங்கு செல்வதெனத் தெரியாமல் தடுமாறி நிற்பவர்களைப் பார்த்திருக்கிறேன். மேலும், ஒரு இசைக்கலைஞனுடன் பேசுவதற்கே அங்கு ஜாதி தடையாக இருக்கிறது. இதுகுறித்து யோசித்து சில முடிவுகளை எடுத்திருக்கிறேன். அதற்கு மற்ற இசைக்கலைஞர்களின் ஆதரவு எனக்குத் தேவை.

* உங்களின் இந்தப் பணி, பெரும்பான்மை சமூகத்தைச் சென்றடையவில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. மிகப்பெரிய மக்கள் கூட்டம் இதுவரையிலும் செவ்வியல் இசையை வேற்றுமையுடன் பார்க்கும் பார்வையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் இந்த மாதிரி செய்யவில்லை. ஏனென்றால், திரைப்பட இசை போன்று கர்நாடக இசையும் பிரபலமாக வேண்டும் என விரும்புகிறவன் நான். அதுமட்டுமில்லாமல், எல்லாமே எண்ணிக்கையில் அதிகமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், என் முயற்சியின் மூலமாக கர்நாடக இசை எல்லோரையும் எளிதாகச் சென்றடைய வேண்டும் என விரும்புகிறேன். கர்நாடக இசை அனைவருக்குமானதாக மாறவேண்டும் என்பது என் ஆசை. கர்நாடக இசை குறித்து இந்தச் சமுதாயம் வைத்திருக்கும் பயத்தையும், அளவீடுகளையும் தளர்த்தி என் குறிக்கோளைத் தொடவேண்டும். மக்கள் உளவியல்ரீதியாக கர்நாடக இசையை அணுக மக்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். அந்த உளவியல் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
* உங்கள் எண்ணம் உண்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கலாம். இருந்தாலும், குறிப்பிடப்படும் அந்த உயர்ஜாதி மக்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள்தான் கர்நாடக இசையைக் கையில் எடுத்திருக்கின்றனர். அவர்களில் அதிக மக்களை இந்த விஷயத்தில் எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள்?
கர்நாடக இசையை பயிற்சி செய்துவருபவர்களில் போதுமான அளவு உயர்ஜாதி மக்கள் இந்தக் கலையை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தக் கலையில் திறமையானவர்களின் எண்ணிக்கை நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. எனவே, கலைசார்ந்த விஷயத்தில் பயிற்சி பெறுபவர்கள் எண்ணிக்கையை வைத்து அதனுடனான சம்பந்தத்தை முடிவு செய்யாதீர்கள். எல்லா கலை வடிவங்களையும் லட்சக்கணக்கானவர்கள் பயிற்சி பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒன்றை மட்டும் நான் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். கர்நாடக இசையை, தலித்துகள் மற்றும் இதர ஒதுக்கப்பட்ட மக்கள் நுழையக்கூடாதென, மூடிவைக்கப்பட்ட கோவிலாக பார்க்கச் சொல்லவில்லை. ஒரு வீடாகப் பாருங்கள். பலர் இடம்பெறுமளவுக்கு அறைகளைக் கொண்ட வீடாகப் பாருங்கள். அந்த வீட்டின் பல அறைகள் பூட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. தூசி படிந்திருக்கிறது. அந்த இடங்களை கர்நாடக இசையில் ஆர்வம்கொண்ட மற்றவர்களுக்கு கொடுப்பதில் என்ன பிரச்னை ஏற்பட்டுவிடப் போகிறது என்பதுதான் என் விருப்பம்.
ரமோன் மகசேச விருதுபெற்ற T.M.கிருஷ்ணா அவர்கள் THE HINDU பத்திரிகைக்கு அளித்த மின்னஞ்சல் வழிப் பேட்டி.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: