வியாழன், 28 ஜூலை, 2016

கபாலி : காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும்... மதிமாறன்

கபாலி; திரைப்படத்தைத் தாண்டியும் அதைக் கடுமையாக ஆதிக்க ஜாதியினர்  எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் ‘காந்தி-அம்பேத்கர் உடை ஒப்பீடு வசனம்’தான்.
‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம்’ என்று நுற்றாண்டு அடிமைப் புத்தியேடு பணக்கார கவுண்டராக நடித்த ரஜினிகாந்தைப் பார்த்து மக்கள் பாடுவதுபோல் வந்தபோது, வராத கோபம்,
‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்குப் புரியாது’ என்ற தெளிவான அரசியல் கண்ணோட்டத்திற்கு வருகிறது என்றால்,
இன்னும் நீங்கள் ‘தேவர் காலடி மண்ணே..’ என்ற ஜாதிய பின் புல திரைப்பட உணர்வுகளிலிருந்து மீளவில்லை என்பதையே காட்டுகிறது.
பெரியார் எதிர்ப்பிற்காகவே ‘தலித் ஆதரவு அரசியல்’ பேசுகிற பார்ப்பனர்கள், இந்த முறை இடைநிலை ஜாதி உணர்வு நிலையில், ‘தலித் எதிர்ப்பு அரசியல்’ பேசுகிறார்கள்.
கோட் – சட்டை வசனத்திற்காகவே பார்ப்பன ஜாதி உண்ர்வு, இடைநிலை ஜாதிக்கார்களின் முதுகில் சவாரி செய்கிறது.
‘சொல்லுங்க கவுண்டர் வாள்..’ சொல்லுங்க முதலியார் வாள்’ ‘சொல்லுங்க தேவர் வாள்’ என்று சொல்லுகிற பார்ப்பனர்களால்;

ஒரு தலித் எவ்வளவு செல்வாக்குப் பெற்றவராக இருந்தாலும் ‘சொல்லுங்க பறையர் வாள்’ ‘சொல்லுங்க பள்ளர் வாள்’ ‘சொல்லுங்க சக்கிலியர் வாள்’ என்று ஒருபோதும் சொல்லமுடியாது.
இதுதான் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலையும், இயக்கம் நிற்குமிடமும்.
ஜாதிய அபிமானிகளை கொந்தளிக்க வைக்கும், ‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல்’ – இந்த வரியை விரிவாக விளக்கி அய்தாண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறவன் நான், என்பதால் கூடுதல் பெருமை கொள்கிறேன்.
இதைப் பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றி.
திருமதி கீதா. மத்தியரசு நிறுவனத்தில் அதிகாரி. என் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவர். நெய்வேலியில் வசிக்கிறார். தஞ்சை, பாண்டி என்று நான் பேசும் கூட்டங்களுக்கும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து கேட்டு பாராட்டி விட்டுப்போவார்.
அம்பேத்கர் – பெரியார் அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்.
இன்று காலை போனில் அழைத்திருந்தார். ‘கபாலி பட எதிர்ப்பாளர்களைக் கண்டித்தும், வசனம் குறித்தும், உங்களைப் பற்றியும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசினார்’ என்றார்.
நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தியதிலிருந்து இன்று தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் என் எழுத்துக்களை, என் பேச்சை மேற்கோள் காட்டி என்னை ஒரு அறிஞனைப் போல் கொண்டாடி மகிழ்பவர் பேராசிரியர் சுபவீ.
நன்றி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே.

கருத்துகள் இல்லை: