சனி, 30 ஜூலை, 2016

ஆந்திர தடுப்பணையில் தமிழக விவசாயி தற்கொலை !


தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா கட்டும் தடுப்பணையில் விவசாயி ஒருவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூரில், பெரும்பள்ளம் பகுதியில் ஐந்து அடி உயரத்துக்கு இருந்த தடுப்பணையை, ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்திக் கட்டியது. குப்பம் வரையில் ஐந்து இடங்களில் பெரிய தடுப்பணைகளும், பல இடங்களில் சிறிய தடுப்பணைகளையும் ஆந்திர அரசு கட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் அரசின் எதிர்ப்பையும் மீறி ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக, 12 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட்ட பெரும்பள்ளம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பியுள்ளது.

 மழை காரணமாக பாலாற்றில் வந்திருக்க வேண்டிய தண்ணீர் தடுப்பணையால், தடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.
தற்போது, ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பெரும்பள்ளத்தில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் நேற்று திரளாக சென்று பார்த்தனர். வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசனும் (வயது 50) அங்கு சென்றார். உயர்த்தப்பட்ட தடுப்பணையின் மீது நின்று கொண்டு, அணையில் நிரம்பியிருந்த தண்ணீரையே சீனிவாசன் வெறித்து பார்த்தவர், அருகில் நின்றவர்களிடம், “இவ்வளவு தண்ணீர் நிரம்பியும் பாலாற்றில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் வரவில்லையே! தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இந்த தண்ணீர் தமிழகத்துக்கு வந்திருக்குமே!” என்று விரக்தியுடன் கூறி இருக்கிறார். வேதனை தாங்காமல் திடீரென அவர் தடுப்பணையில் நிரம்பி இருந்த தண்ணீரில் குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து சீனிவாசனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சீனிவாசனின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த விவகாரம் அனைத்து தரப்பினரையும் வேதனைக்குள்ளாகி இருக்கிறது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: