வெள்ளி, 2 அக்டோபர், 2015

உ.பியில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவரும் இரு இந்து அமைப்புகள்

வீட்டில் மாட்டு மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் தாத்ரி பகுதியில் இரண்டு உள்ளூர் இந்து அமைப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அக்லாக் மீது இரவு பத்தரை மணி அளவில்தான் தாக்குதல் நடந்தது என்றாலும் மாலையிலிருந்தே வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன என்கிறார்கள் உறவினர்கள். ராஷ்ட்ரவாடி பிரதாப் சேனா, சமாதான் சேனா ஆகிய இந்த இரு அமைப்புகளும் ஆறு மாதங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டவை.

இந்தியத் தலைநகர் தில்லியிலிருந்து வெறும் ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் தாத்ரி பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படுவதற்கு இந்த இரு அமைப்புகளுமே காரணம் என்று கூறப்படுகிறது.
"ஆறு மாதங்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் வகுப்புவாத கலவரங்கள் ஏற்பட்டதேயில்லை. ஆனால், இந்த அமைப்புகள் வந்த பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இரு மதங்களைச் சேர்ந்தவர்களிடையே மோதல்கள் நடக்கும் செய்திகள் வெளிவருகின்றன.
குழந்தைகளுக்கு இடையில் வரும் சிறு சண்டைகளுக்குக்கூட மதச் சாயம் பூசப்படுகிறது" என்கிறார் தாத்ரிக்கு அருகில் இருக்கும் கலோண்டா கிராமத்தின் தலைவரான அஸ்மத் கான். ராஷ்ட்ரவாடி பிரதாப் சேனா என்ற அமைப்பு ஆறு மாதங்களுக்கு முன்பாக உருவானது என்றாலும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து அவற்றுக்கு வலதுசாரி சித்தாந்தத்தைப் புகட்டுவதாக இந்த அமைப்புகளின் மீது உள்ளூர் இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இளைஞர்களை வைத்து கூட்டங்களை நடத்துவது, இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலம் செல்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்துவருவதாக அவர்கள் கூறுகின்றனர். மசூதிகளில் ஒலிபெருக்கி வைக்க எதிர்ப்பு ஜர்ச்சா என்ற கிராமத்தில் இஸ்லாமியர் வைத்திருந்த கடைக்கு எதிராக இந்த குழுக்கள் போராட்டம் நடத்திய பிறகு அந்தக் கடை மூடப்பட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதையும் இவர்கள் எதிர்த்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். தாங்கள் மதம் மாறவேண்டுமெனக் கூறி உள்ளூரில் இந்த அமைப்புகள் கூட்டங்களை நடத்துவதாகக் கூறுகிறார் ஜர்ச்சா கிராமத்தின் தலைவர் அஹ்சான் சௌத்ரி. தனது வீட்டை கடந்த மாதம் கும்பல் ஒன்று தாக்கியதாக ஜர்ச்சா கிராமத்தின் தலைவரான அஹ்சான் சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து எனது குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் தட்டிக்கோட்டபோது, அவர்களை விரட்டியடித்தார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துக்கள் என்பதால் இவர்கள் இந்துக்களாக மதம்மாற வேண்டும் என இந்த குழுக்கள் கூட்டங்களைப் போட்டு பேசுகிறார்கள்" என்கிறார் அஹ்சான் சௌத்ரி.

"பசு புனிதமானது"

அஹ்சான் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சமாதான் சேனாவின் தலைவர் கோவிந்த் சௌத்ரி என்பவரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. அவர் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துவிட்டார்.தான் மக்களின் உரிமைக்காகப் போராடிவருவதால், உள்ளூர் அதிகாரிகள் தனக்கு எதிராக இப்படியான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகச் சொல்கிறார் கோவிந்த் சௌத்ரி.
"என் கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமிய அமைப்புகளைக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் எங்கள் அமைப்புக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் கடை திறக்க அனுமதிக்க வேண்டாமென எந்த ஹிந்துவிடமும் நாங்கள் சொல்லவில்லை. இவையெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள். பசு வதையைப் பொறுத்தவரை, அது சட்டத்தால் தடை செய்யப்பட்டது. இந்துக்கள் பசுவை புனிதமானதாகக் கருதுகிறார்கள். பசு வதை நடப்பதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்" என்கிறார் கோவிந்த் சௌத்ரி.

வாட்ஸ்அப் மூலம் வதந்திகள்

பிசடா என்ற கிராமத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மற்றொரு குழுவான ராஷ்ட்ரவாடி பிரதாப் சேனா மீது முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகின்றனர். அக்லாக் மாட்டு மாமிசம் சாப்பிட்டதாக கோவிலில் அறிவிக்கப்பட்டதை பலரும் கேட்டிருக்கிறார்கள். மாட்டு மாமிசம் வைத்திருந்ததாகக் கூறப்பட்ட முஹம்மது அக்லாக் வீட்டின் மீது இரவு பத்தரை மணியளவில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்றாலும், மாலை ஆறு மணியிலிருந்தே வாட்ஸ்அப் மூலம் பசு வதை நடந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டதாக அக்லாக்கின் சகோதரர் அஃப்சல் பிபிசியிடம் கூறினார்.
இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளூர் பள்ளிக்கூடங்களில் இளைஞர்களைத் திரட்டி கூட்டம் நடத்தி, இஸ்லாமியர்கள் பசு வதையில் ஈடுபடுவதாக தூண்டிவிட்டதாக அக்லாக்கின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
"இப்போது இஸ்லாமியர் யாரும் பசு ஒன்றை வாங்கி வீட்டுக்குக் கொண்டுவர முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. பசுவை கொல்வதற்காக நாங்கள் கூட்டிச் செல்வதாக குற்றம்சாட்டி நாங்கள் தாக்கப்படலாம்; ஏன், கொலைகூட செய்யப்படலாம்" என்கிறார் அஹ்சான் சௌத   bbc.tamil.com

கருத்துகள் இல்லை: