திங்கள், 28 செப்டம்பர், 2015

மழைநீரை அப்படியே உறிஞ்சும் பிளாஸ்டிக் சாலை. நெதர்லாந்தில்...

ஆம்ஸ்டர்டாம்: மழை நீரை முழுவதும் உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான புதிய பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட் சாலைகளை அமைத்துள்ளது நெதர்லாந்து நிறுவனம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகளில் எண்ணிலடங்கா நுண்ணிய துளைகள் அமைந்துள்ளன. இதன் மூலம் சாலையில் நீர் தேங்காமல், அனைத்தும் விரைவாக பூமிக்கடியில் சென்று விடும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்
இந்த சாலையில் ஒரே நேரத்தில் சுமார் 4000 லிட்டர் தண்ணீரை ஊற்றி சோதனை செய்யப்பட்டது. 4000 லிட்டர் தண்ணீரும், நீர் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஒரு நிமிடத்தில் நிலத்திற்கு அடியில் சென்று விட்டது
எவ்வளவு தண்ணீர் கொட்டினாலும் சேதமடையாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது இந்த சாலைகளின் சிறப்பம்சம். ஒருவேளை சேதமடைந்தாலும், இந்த பிளாஸ்டிக் சாலைகளை எளிதில் சீரமைத்து விடலாம்
சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து இந்த பிளாஸ்டிக் சாலைகளை குறைந்த செலவில் அமைக்க முடியும் என இந்த சாலையை வடிவமைத்த நிறுவனத்தினர் உறுதிபட கூறுகின்றனர்
மேலும், இது குறித்து அந்நிறுவனத்தார் கூறுகையில், "நமது வழக்கமான சாலை அமைக்கும் பணிகள், பராமரிப்பிற்கு கடினமானதாக இருந்தது. மேலும் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியதாக இல்லை. ஆனால் இந்த பிளாஸ்டிக் சாலைகள் மிக லேசானதாக இருப்பதால், நிலத்திற்கு அதிக பாரத்தை தராது.
இதில் உள்ள துளைகளை பயன்படுத்தி கேபிள்கள் மற்றும் பைப்களை நிலத்திற்கு அடியில் எளிதில் பதிக்க முடியும். கழிவுநீர் குழாய்களும் இதற்கு அடியில் அமைக்கப்படுவதால் நிலத்தின் நீர்மட்டம் உயர வழிவகை செய்யும்.
நகர்புறப்பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால் தட்பவெப்பமும் குறையும். தட்வெப்ப மாற்றத்தையும் இந்த சாலைகள் தாங்கக் கூடியவை. இதனால் மழை அளவும் அதிகரிக்கும்
குளுமையான சுற்றுச்சூழல்... நிலத்தில் எளிய முறையில் அதிக அளவிலான நீர் சேமிக்கப்படுவதால், சுற்றுச்சூழலும் குளுமையாக இருக்கும். இந்த கான்கிரீட்கள் 60 ஆண்டுகள் வரை கூட சேதமடையாமல் இருக்கும்" என்கின்றனர்.
இந்த வீடியோவானது பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இது போன்ற சாலைகள் நமது ஊருக்கும் வந்தால், மழைக்காலங்களில் நமது சாலைகளுக்கும் விமோசனம் கிடைக்கும்.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: