ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

இந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழகம் இரண்டாவது இடம். விஜயகாந்த்!

மதுவிலக்கு குறித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பேச்சை கண்டித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் மதுக்கடைகளையும், அதன் வேலை நேரத்தையும் படிப்படியாக குறைத்திடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் 25.09.2015 அன்று மதுவிலக்கு துறையின் மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக அரசு வெளியிடுமென தமிழகமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எல்லாவற்றிலும் ஏமாற்றுவதைப் போலவே, இதிலும் அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது. மதுவிலக்கிற்காக உயிரை இழந்த சசிபெருமாளின் குடும்பத்திற்கு கூட எவ்வித நிவாரணமும் வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.


தமிழகத்தில் மதுகுடிப்பவர்களின் எண்ணிகை சுமார் இரண்டு கோடி என்றும், அதனால் இந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தொழில் முதலீட்டை ஈர்க்கக்கூடிய மாநிலங்களின் வரிசையில் பனிரெண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது என்று உலக வங்கி கூறுகிறது இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை. எந்த துறையில் முதலிடத்தில் இருக்கவேண்டுமோ அதில் கடைசி இடத்திலும், கடைசி இடத்தில் இருக்கவேண்டிய துறையில் முதலிடத்திலும் இருப்பதுதான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய அதிமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனையாகும். 

ஒவ்வொரு ஆண்டும் மதுவிற்பனை அதிகரிக்கிறது என்றால், மதுபானத்தின் விலையை உயர்த்தியுள்ளோம் அதனால்தான் வருமானம் அதிகரித்துள்ளது என்று வியாக்கியானம் பேசுகிறார் அமைச்சர். டாஸ்மாக் மூலம் மதுவகைகள் 2014 – 2015ல் 8.05 கோடி பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2011 - 2012ல் அதிமுக ஆட்சிக்கு பிறகு வந்தபோது கொள்முதல் செய்யப்பட்டதற்கும், தற்போதைய கொள்முதலுக்கும் சுமார் இரண்டு கோடி பெட்டிகள் அதிகரித்துள்ளன. அதாவது சுமார் 96 கோடி பாட்டில்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 


சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதுவிலக்கு குறித்து பேசினால் மதுகுடிப்பவர்களை நீங்கள் திருத்துங்கள், உங்கள் கட்சி திருத்தட்டும், மதுக்குடிப்பவர்களை உங்கள் கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று ஆணவத்துடன் கேலியும், கிண்டலும் செய்து கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் மதுக்குடிப்பதை தடுத்திட பிரச்சாரம் செய்யலாம் வாருங்கள் என்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தரம்தாழ்ந்து பேசுகிறார். மக்கள் நலனுக்காக பல பிரச்சனைகளில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டச்சொல்லி தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், “செவிடன் காதில் ஊதிய சங்காக”, இருந்துகொண்டு செவி சாய்க்காத இந்த அதிமுக அரசு, மதுப்பிரச்சனையில் மட்டும் அனைவரும் ஒன்று சேரலாம் என்றுகூறுவது நகைப்புக்குரியதாகும். இதைச் சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எதற்காக நீங்கள் அமைச்சராக இருக்கிறீர்கள்? மதுகுடிப்பவர்களை தடுக்க முடியவில்லை, திருத்த முடியவில்லை என்றால், உங்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் எதற்காக? ஆட்சியை விட்டு விட்டு போய்விடுங்கள். மதுவில் இருந்து மக்களை மீட்டெடுக்க எங்களுக்குத் தெரியும். மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அறிவித்தபிறகு, தமிழ்நாட்டில் எதற்காக  மதுவிலக்குத்துறை? அதற்கு மதுவிற்பனைத்துறை என்று பெயர் வைத்து நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கலாம்.
தமிழகத்தில் மூன்றாம் தலைமுறையான இளைஞர்கள், மதுவின் பிடியில் சிக்கி உள்ளனர். பள்ளி மாணவி மது போதையில் தள்ளாடுவது சமூக வலைத்தளங்களில் வெளிவந்து தமிழ் சமுதாயமே அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், “பண்டைய காலத்திலேயே இறந்துபோன மன்னனை வாழ்த்திப் பாடிய பெண் கவிஞர் ஒருவர், சிறிதளவே என்றாலும், கிடைத்த கள்ளைத் தருவாயே என்று புகழ்ந்துள்ளார். அதன்படி பார்க்கும்போது பெண்கவிஞரும் மன்னரிடமிருந்து மது வாங்கி அருந்தியுள்ளார் என்பது புரியும்” என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். பெண்களும் மது அருந்த வேண்டுமென அவர் விரும்புகிறாரா? தமிழக தாய்மார்களையும், சகோதரிகளையும் தரம்தாழ்த்தி, இழிவுபடுத்திப் பேசியிருப்பது தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது. தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா என்கின்ற பெண்மணி இருக்கும்போது, அவருடைய அமைச்சரவையில் இருப்பவர் பெண்களை கேவலமாக சித்தரிப்பதை ஜெயலலிதா ஆதரிக்கிறாரா? இல்லை என்றால் வெளிப்படையாக அவரை கண்டித்திருக்க வேண்டுமல்லவா? இனிமேலாவது அமைச்சர் போன்ற உயர்ப தவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிக்கு தகுந்தவாறு உயர்வான கருத்துக்களை பேசவேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: