ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் மோடி தகவல்

சிலிக்கான்வேலி: அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவன சி.இ.ஓக்கள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். மோடி பேசியதாவது: பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் இப்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றிவிட்டன. இந்தியாவின் குக்கிராமங்களிலுள்ள பெண்கள் சிறந்த மருத்துவ சேவையையும், விவசாயிகள் நல்ல மார்க்கெட் ரேட்டையும் இணையம் மூலம் அறிந்துகொள்கிறார்கள்.  பெண் குழந்தைகளை காப்பாற்ற அரியானாவில் தந்தை-மகள் இணைந்து ஸ்மார்ட்போனில் எடுத்த செல்ஃபி உலக இயக்கமாக மாறியது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் (ஐடி நிறுவன ஜாம்பவான்கள்) செய்யும் பணி.
இந்திய இளைஞர்களின் பேச்சு இப்போது ஆக்கப்பூர்வமாக மாறியுள்ளது. ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் அல்லது விண்டோஸ் இதில் எந்த ஆபரேட் சிஸ்டத்தை தேர்ந்தெடுக்கலாம் என எங்கள் நாட்டு இளைஞர்கள் விவாதித்து வருகிறார்கள். அரசு சிறப்பாக இயங்குகிறதா என்பதை இணையத்தை வைத்தே சோதித்து பார்த்துக்கொள்ள முடிகிறது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் ஏழ்மையை டெக்னாலஜியை கொண்டும், செல்போன்களை கொண்டும் விரட்டியடிக்கிறோம். சமூக வலைத்தளங்கள், சமூக தடைகளை உடைத்தெறிந்துள்ளது. அடையாளங்களை அவை பார்ப்பதில்லை. தகுதியை மட்டுமே சமூக வலைத்தளங்கள் பார்க்கின்றன. இந்தியாவில், 80 கோடி மக்கள் 35 வயதுக்கு கீழுள்ளவர்கள். அவர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை இரண்டு டிஜிட்டலில் வளர்ச்சி அடைகிறது. நரேந்திரமோடி என்ற பெயரில் செல்போன் ஆப் வெளியிட்டோம். அதில் மக்களுடன் என்னால் உரையாட முடிகிறது. காகிதம் இல்லாத அரசாட்சியை நாங்கள் முன்னெடுக்கிறோம். இணைய போர்டல் உருவாக்கி, தொழில்தொடங்க வருவோருக்கு வசதி செய்துதருகிறோம். எனவே, தொழிலதிபர்கள் தங்கள் குறிக்கோளில் கவனம் வைக்கலாமே தவிர, அரசின் செயல்பாடு குறித்து யோசித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. டிஜிட்டல் அறிவின்மையையும், எழுத்தறிவின்மை போன்றே சீரியசாக கருத்தில் எடுத்துள்ளோம். இரண்டையும் அகற்ற இந்திய அரசு முயல்கிறது. 22 அதிகாரப்பூர்வ மொழி கொண்டது இந்தியா. அங்கு மாநில மொழிகளில் பயன்படுத்தும் வகையில், இணையம் வர வேண்டும். அப்போதுதான், அது வெற்றி பெறும். பிராந்திய மொழிகளில் இணையத்தை கொண்டுவருவதாக சுந்தர் பிச்சை வாக்குறுதியளித்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தியா-அமெரிக்கா நடுவே பார்ட்னர்ஷிப் சீராக உள்ளது. இரு நாடுகளும் இணைந்து டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், பணியாற்ற வேண்டும். சிலிக்கான்வேலியிலுள்ள ஒவ்வொருவரும் டிஜிட்டல் இந்தியாவில் பங்கேற்க வேண்டும். இந்தியாவிலுள்ள ஏர்போர்ட்டுகளில் மட்டுமல்ல, இந்தியாவின் 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை இணையதள வசதியை அரசு அளிக்க உள்ளது. இதற்காக இந்திய அரசு கூகுளுடன் பார்ட்னர்ஷிப் மேற்கொண்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: