ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சென்னை: மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி

பெரம்பூரில் பெற்றோருடன் சென்ற சிறுவன் அஜய் (வயது 5) மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தான். பெரம்பூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சுற்றி அறுத்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாஞ்சா நூல் தயாரிப்போர் மீதும், அதனை விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு இதனை செவிக்கொடுத்து கேட்காததால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
 சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்.என்., தெரு மற்றும் சவுக்கார்பேட்டை சுப்பிர மணியன் தெரு உள்ளிட்ட சில இடங்களில் காற்றாடி மொத்த வியாபார கடைகள் உள்ளன. இங்கிருந்து தான் தமிழகம் முழுவதும் விற்பனைக்காக காற்றாடிகள் அனுப்பப்படுகின்றன. காற்றாடியுடன் மாஞ்சா தடவிய நூல்கண்டுகள் காற்றாடி பறக்கவிடும் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பலரும் மாஞ்சா தடவிய நூலை பயன்படுத்துவதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மாஞ்சா நூலால் அறுபட்ட பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, மாஞ்சா நூல் விற்பனைக்கு கோர்ட் தடை விதித்தது. 
தடையை நீக்க மனு: இதை எதிர்த்து, தமிழ்நாடு பறக்கும் காற்றாடி உற்பத்தியாளர் சங்கம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, காற்றாடி மற்றும் வெள்ளை நூல் கண்டுகள் விற்க அனுமதி வாங்கினர். இது ஒருபுறம் இருந்தாலும், மாஞ்சா நூல் விற்பனை அமோகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. மாஞ்சா நூலால் உயிரிழப்பு ஏற்படும் போது மட்டும் இதை விற்பவர்களிடம் போலீசார் கெடுபிடி செய்து, நூல் பறிமுதல் செய்கின்றனர். இதனால், மாஞ்சா நூலால் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த எட்டாம் தேதி, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தில் பைக்கில் மகனுடன் சென்ற கோபாலகிருஷ்ணன் கழுத்தை மாஞ்சா நூல் பதம் பார்த்தது. படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடியவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. ஆட்டோ டிரைவர் உதவியுடன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றவர், கவனிப்பாரின்றி இறந்தார்.

இருந்த ஆதரவும் போச்சு...: கோபாலகிருஷ்ணன் குடும்பம் சிறியதுதான். மனைவி சுந்தரி, 10வது படிக்கும் மகள் சரண்யா, எட்டாவது படிக்கும் மகன் அருண்குமாரும் உள்ளனர். கணவர் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம் இனி என்ன செய்யப்போகிறோம் என திகைத்து நிற்கிறது. சவுக்கார்பேட்டையில் 42 ஆண்டுகளாக காற்றாடி விற்பனை செய்யும் சீனிவாசலு கூறுகையில், "சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் மாடியில் விடும் காற்றாடியால் பிரச்னை இல்லை. அறுந்து விழும் காற்றாடியை பிடிக்க தெருக்களில் ஓடும் சிறுவர்களால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பறக்கும் காற்றாடி மற்றும் வெள்ளை நூலை விற்க தடை இல்லை. கடந்த 1986ம் ஆண்டு கோர்ட் உத்தரவுப்படி நாங்கள் விற்பனை செய்து வருகிறோம்' என்றார்.

மனரீதியாக பாதிப்பு: பழையவண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையை சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில்,"சில மாதங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் மின்ட் பாலத்தில் வேகமாக வந்தேன். அப்போது, காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் என் முகத்தை பதம் பார்த்தது. செத்தேன் என்றே நினைத்தேன். நான் இறந்தால் என் மகளை யார் காப்பாற்றுவது என கண் கலங்கினேன். நல்ல வேளையாக, மாஞ்சா நூலில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. பல மாத சிகிச்சைக்கு பின் தேறினேன். இதுபோல பலரும் மாஞ்சா நூலால் மனரீதியாக பாதிப்படைந்துள்ளனர்' என்றார். 

வேண்டாம் மாஞ்சா: சிறுவயதில் பெரியமேட்டில் மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட காமேஸ்வரன், தற்போது முத்தமிழ்நகரில் வசித்து வருகிறார். காற்றாடி குறித்து அவர் கூறியதாவது: சிறுவயதில் மாஞ்சா நூலில் காற்றாடி விடும் போது, எனக்கு பலமுறை கையில் நூல் பட்டு சதை கிழிந்துள்ளது. தற்போது மாஞ்சா காற்றாடியால் பலரது உயிரே கண் இமைக்கும் நேரத்தில் போவதை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்பட்டதில் இருந்து, காற்றாடியை விளையாட்டாக, எனக்கு தெரிந்த யாரையும் பழகக்கூட விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மீறி மாஞ்சா நூலில் காற்றாடி விடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கூட கைது செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

40 பேர் பலி: மாஞ்சா நூலில் காற்றாடி பறப்பதற்கும், மாஞ்சா நூல் விற்பதற்கும் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்த மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு சென்னையில் கடந்த 1990ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு ஜூலை வரை 40 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று மாதத்தில் வானகரத்தில் ஒருவரும், தண்டையார்பேட்டையில் கோபாலகிருஷ்ணனும் பலியாகியுள்ளனர்.

கடும் நடவடிக்கை தேவை: பொதுமக்கள் கூறுகையில், "மாஞ்சா நூலால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை தான் நடந்திருக்கிறது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காற்றாடி பறக்க விடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சா நூல் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மாஞ்சா நூல் விற்கமாட்டார்கள்' என்றனர்

கருத்துகள் இல்லை: