வியாழன், 1 அக்டோபர், 2015

சென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர் வெட்டிக் கொலை ! பட்டப் பகலில் 86-ஆவது வட்ட உறுப்பினராகவும் அண்ணா தொழிற்சங்கத்தின்....

சென்னை மாமன்ற உறுப்பினர் குரு (48) அம்பத்தூரில் புதன்கிழமை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 சென்னை, பாடி மண்ணூர்பேட்டை மாணிக்கம்பிள்ளை தெருவைச் சேர்ந்த குரு, சென்னை மாநகராட்சியின் 86-ஆவது வட்ட உறுப்பினராகவும், அண்ணா தொழிற்சங்கத்தின் அம்பத்தூர் நகரச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
 புதன்கிழமை நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் 1.20 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்து, கார் வருவதற்காக சற்று தொலைவு நடந்து சென்றார்.அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், குருவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
 அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குருவை, அவரது காரிலேயே ஏற்றிக் கொண்டு அண்ணா நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குரு உயிரிழந்தார். சேவை செய்யவா அரசியலுக்கு வாராக? பங்கு பிரிப்பதில் தகராறு ?  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா?

  தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் கர்ணன், நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர், கொலையாளிகள் குறித்த முக்கியத் தடயம் சிக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
 மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியச் சாலையில், பட்டப்பகலில் மாமன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 மாமன்ற உறுப்பினரின் வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா கடந்த இரு நாள்களாக வேலை செய்யவில்லை. கேமராவின் இணைப்பு வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. எனவே, கொலையாளிகள் திட்டமிட்டு கேமராவின் வயர்களை துண்டித்து கொலைத் திட்டத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
 நில விவகாரம் தொடர்பாக குருவுக்கும், கொரட்டூரைச் சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் அவர், கூலிப்படையை ஏவிக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 இறந்த குருவுக்கு, மாஸ்கிரின் மேரி என்ற மனைவியும், ஆன்ரோ ஸ்டாலின் (22) என்ற மகனும், ஷெஃபி (20) என்ற மகளும் உள்ளனர்.
 சந்தேகித்த குரு
 கடந்த சில நாள்களாக தன்னை யாரோ பின்தொடர்ந்து வருவதாக தனது நண்பர்களிடம் குரு கூறியுள்ளார். இதனால், எப்போதும் காரின் முன் இருக்கையில் அமர்ந்து செல்லும் அவர், அண்மைக் காலமாக பின் இருக்கையில் அமர்ந்து சென்று வந்துள்ளார்.
 மேலும், கொலை நிகழ்ந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் சுற்றி வந்துள்ளனர். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இருவர் வீடுகளுக்கும் போலீலீஸார் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. dinamani.com

கருத்துகள் இல்லை: