வெள்ளி, 24 ஜூலை, 2015

மலையாள நடிகை ஷில்பா மரணம் ! அவரது காதலன் கைது!

மலையாள நடிகை ஷில்பா சாவில் திடீர் திருப்பமாக, தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
சினிமா நடிகை
திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டை சேர்ந்தவர் ஷாஜி. இவருடைய மகள் ஷில்பா (வயது 19) பிளஸ்–2 படித்துள்ள இவர் தமிழ், மலையாள சினிமா மற்றும் கேரள டி.வி தொடர்களில் நடித்து வந்தார். ‘சந்தன மழை’ உள்பட பல தொடர்களில் நடித்துள்ள ஷில்பா தனியார் டி.வி. நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். பாலராமபுரத்தில் பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அடிக்கடி வெளியே சென்று வருவது வழக்கம்.
காதலனுடன் சென்றவர்
கடந்த 17–ந் தேதி (வெள்ளிக்கிழமை) அந்த பகுதியை சேர்ந்த பெண்ணுடன், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது ஷில்பாவின் காதலன் என்று கூறப்படுபவரும், அவருடைய சொந்த போட்டோகிராபருமான லிஜின் என்ற வாலிபரும் உடன் சென்றதாக தெரிகிறது.

பின்னர் ஷில்பா வீட்டிற்கு திரும்பவில்லை. மகள் வீட்டிற்கு வர தாமதமானதை தொடர்ந்து ஷில்பாவுக்கு அவருடைய பெற்றோர் போன் செய்தனர். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது. உடனடியாக ஷில்பாவை அழைத்து சென்ற பெண்ணிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஷில்பா தன்னுடன் தகராறு செய்து விட்டு தனியாக சென்று விட்டதாகவும், அவர் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது, என்றும் கூறிவிட்டார்.
மர்மச்சாவு
இந்த நிலையில் மறுநாள் நடிகை ஷில்பா திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மருதூர் கடவு பாலம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கரமனை போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், எனவும் போலீசில் அவருடைய பெற்றோர் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் காதலன் லிஜின் தலைமறைவானது தெரிய வந்தது.
தனிப்படை விசாரணை
ஷில்பாவின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தவும், தலைமறைவான காதலன் லிஜின் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்கவும் திருவனந்தபுரம் போர்ட் போலீஸ் துணை கமிஷனர் சுதாகரன் பிள்ளை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
முன்னதாக ஷில்பாவின் மர்மச்சாவு குறித்து, அவரின் நெருங்கிய தோழிகள் மற்றும் திரைப்படம், டி.வி. தொடர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஷில்பா மாயமான தினத்தில் அவருடன் சென்றவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்தனர்.
நடிகை ஷில்பாவின் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக நேற்று காலை காட்டாக்கடையில் நண்பர்களுடன் ஒரு பெட்ரோல் பங்கில் நின்று கொண்டு இருந்த லிஜினை போலீசார் கைது செய்தனர்.
நடிகை ஷில்பா சாவு குறித்து லிஜினிடம் தம்பானூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் ஷில்பாவின் சாவுக்கு காரணம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.dailythanthi.com

கருத்துகள் இல்லை: