வெள்ளி, 24 ஜூலை, 2015

கரசேவை செய்ய எதற்கு கருப்புத் துண்டு வைகோ அவர்களே?

VAIKO-cartoon -700 pixஎதுகை மோனை என்சைக்ளோபீடியாவா இல்லை சந்தர்ப்பவாதமா இரண்டில் வைகோவிடம் விஞ்சுவது எது என்றால் சாலமன் பாப்பையாவே திணறுவார். 22.07.2015 அன்று மோடியை சந்தித்த வைகோ அருளியிருக்கும் பொன்மொழிகளைப் பாருங்கள். 12.30க்கு நேரம் ஒதுக்கிய மோடி 12.00 மணிக்கே அழைத்தாராம். அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதே சாதனை மேல் சாதனையாக காட்ட வேண்டுமென்றால் அந்த இதயம்தான் எத்தனை பெரிய வேதனையில் வாடிக் கொண்டிருக்கும்?
“தினமும் உங்களை விமரிசித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் எனது நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடன் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி” என்று நெஞ்சம் கலங்க மோடியிடம் நெகிழ்ந்திருக்கிறார் வைகோ. ஜெயாவிடம் சந்திக்க அப்பாயின்ட் மெண்டு கேட்டுகிட்டு இருக்காராம்ல ! கிடைத்ததும் மீண்டும் உணர்ச்சி பிழம்பாக ஆயுடுவார்ல ? வடிவேலு ஏன் இன்னும் இந்த கரக்டரை படத்துல யூஸ்பண்ணல?

மேற்கண்ட சாஷ்டாங்க நமஸ்காரத்திற்கு பதிலளித்த மோடி, “ நீங்கள் உணர்ச்சிமயமானவர். அதனால்தான் ஈழப் பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள்” என்றாராம். ஆக மொத்தம் புரட்சிப் புயல் தினமும் மோடியை பிச்சு உதறுவதை மோடி வாள் காமடியாக அல்ல அதற்கும் கீழாகவே எடுத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. தான் திட்டும் மனிதனே அதை திட்டாக நினையாமல் திட்டியவனை தட்டிக் கொடுக்கிறார் என்றால் திட்டுபவரின் நிலையை யோசித்துப் பாருங்கள்! இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு நீங்களும் வைகோவாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
பிறகு 2000 முசுலீம்களின் கொலைக்கு காரணமான நபரிடம் 20 தமிழ் தொழிலாளிகளின் கொலைக்கு நியாயம் கேட்டாராம். இறுதியில் மோடி,”இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டுமானலும் சந்திக்கலாம்” என்றாராம். அதற்கு“ பெரியார் பிறந்த நாளில் மோடி பிறந்ததை நினைவுபடுத்திவிட்டு அவரிடம் இருந்து விடை பெற்றேன்” என்கிறார் வைகோ.
எதை எதையோ இணைத்து பார்க்கும் இது என்சைக்ளோபீடியா நோயின் வெளிப்பாடு என்றாலும், போராடுவது வேண்டாமென எதிரியின் காலடியில் விழுந்து சாதிக்கலாம் என்று நினைக்கிறாரே வைகோ, இதுதான் வரலாறு அவருக்கு தீர்மானித்திருக்கும் இடம். வினவு.com 

கருத்துகள் இல்லை: