சனி, 18 ஜூலை, 2015

ஒரு ரூபாய் விமானப் பயணம் – ஆடித் தள்ளுபடியின் பின்னணி!

ஒரு ரூபாய்க்கு பேருந்து டிக்கெட்டே கிடைக்காத நிலையில் விமானப் பயணமா? ஆச்சரியப்படுகிறது தினமணி. இதையே தி இந்து, விகடன், புதிய தலைமுறை.. அனைவரும் தலைப்பில் போட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் செய்தி எவ்வளவு விளம்பரம் எவ்வளவு என்பதில் ரகசியம் இல்லை. எல்லா செய்திகளிலும் இந்த தள்ளுபடியின் உண்மை முகத்தை போகிற போக்கில் சொல்கிறார்கள். அதாவது இருவழிப் பயணத்திற்கான கட்டணத்தில் ஒரு வழி மட்டும் ஒரு ரூபாய் மற்றும் வரியோடு வசூலிக்கப்படும். சான்றாக ரூ.10,000 மதிப்புள்ள இருவழிப் பயணச் சீட்டில் தோராயமாக ரூ.4500 தள்ளுபடி செய்கிறார்கள். மேலும் ஸ்பைஸ் ஜெட் செல்பேசி செயலியை நிறுவிக் கொண்டு அதிலிருந்து மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் இந்த சலுகையின் படி அடுத்த வருடம் மார்ச் வரை முன்பதிவு செய்ய முடியும்.

அவசரப் பயணங்களின் காலத்தில் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்பவர்கள் அரிது. இருப்பினும் மாம்பலம், மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் 1 ரூபாய் வலையில் விழுந்து பதிவு செய்தாலும், திடீரென்று பயணத்தை ரத்து செய்தால் துட்டு கிடைக்காது.
மேலும் செல்பேசி செயலியின் மூலம் பதிவு செய்வதால் பயணிகளின் அந்தரங்க உலகில் நுழைந்து அவர்களது விமான பயண சங்கதிகளை தெரிந்து கொண்டு விளம்பரம் கொடுப்பதும், மேன்மேலும் இது போன்ற தள்ளுபடிகள் காட்டுவதும் தனிக் கதை.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஒரு ரூபாய் வலை விளம்பரத்தில் ஸ்பைஸ் ஜெட்டுக்கு நட்டம் இல்லை. ஆம்னி பஸ்ஸோ இல்லை ஆம்புலன்ஸ் விமானங்களோ அனைத்தும் ஒரு வழித்தடத்தின் ஒரு பயணத்தில் மட்டுமே லாபம் பார்க்கின்றன. மற்றொரு பயணம் அந்த லாபத்தை தேடிச் செல்லும் பயணம் மட்டுமே.
இருப்பினும் தலைப்பில் ஒரு ரூபாயைப் போட்டு ஒரு இலட்சம் டிக்கெட்டுகளை விற்கவேண்டும் என்று ஒரு சரோஜாதேவி சோப்பு டப்பா கம்பெனி முடிவு செய்கிறானே, அவ்வளவு ஏமாளிகளா நம் மக்கள்?< vinavu.com

கருத்துகள் இல்லை: