செவ்வாய், 14 ஜூலை, 2015

நாமக்கல் நரபலி கொடுக்க சிறுவனைக் கடத்த முயற்சி: 5 பேர் கும்பல் கைது

புதையல் எடுக்க சிறுவனை நரபலி கொடுக்கப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, மந்திரவாதி உள்ளிட்ட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
 நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை அடுத்த கோணாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராசம்மாள் (60), அவரது மகன் ரவிக்குமார் (40), மருமகள் பானுமதி (31).கட்டட மேற்பார்வையாளரான ரவிக்குமாரின் வீட்டில் புதையல் எடுக்க, மரக்காணத்தைச் சேர்ந்த மந்திரவாதி சத்யமூர்த்தி (27) கடந்த 6 மாதங்களாக தினமும், நள்ளிரவில் சிறப்புப் பூஜைகள் செய்து வந்தாராம்.

 சத்யமூர்த்தியுடன் தஞ்சையைச் சேர்ந்த தாமஸ் (38), கரூரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜேந்திரன் ஆகியோரும் தங்கி இருந்தனர்.
 இந்த நிலையில், குழந்தை, கன்னிப் பெண்கள், கர்ப்பிணிகளை நரபலி கொடுத்தால் புதையல் கிடைத்துவிடும் என சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள கர்ப்பிணிகள், முதல் குழந்தை, கன்னிப் பெண்கள் ஆகியோரை கண்காணித்து வந்துள்ளனர்.
 இதற்கிடையில், திங்கள்கிழமை காலை ரவிக்குமார் அவரது தாய் ராசம்மாள், மனைவி பானுமதி மற்றும் சத்யமூர்த்தி உள்ளிட்டோர் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை நரபலி கொடுப்பதற்காக கடத்த முயன்றனராம். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அவர்களைப் பிடித்து அடித்து உதைத்தனர்.
 அவர்களிடமிருந்து ரவிக்குமார் உள்பட மூன்று பேர் தப்பினர். மற்ற 5 பேரை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தனர். தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
 இதையடுத்து, போலீஸாரிடம் ராசம்மாள், பானுமதி, சத்யமூர்த்தி, ராஜேந்திரன், தாமஸ் ஆகிய 5 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் dinamani.com 

கருத்துகள் இல்லை: