வெள்ளி, 8 மே, 2015

முரட்டு பாசத்தின் முட்டாள் தனத்தை காட்டும் கங்காரு

உயிர், மிருகம், சிந்து சமவெளி என மனசுக்கு சவாலான  படங்களை எடுத்த இயக்குனர் சாமி உருவாக்கியிருக்கும் திரைப்படம் கங்காரு. 'என்னால் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய விதத்திலும் படமெடுக்க முடியும்' என நிரூபிக்க சாமி எடுத்த இந்த முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே கூறலாம்.கைக்குழந்தையுடன் எஸ்டேட் வேலை செய்ய மலைக்கிராமத்திற்கு வரும் அர்ஜுனனுக்கு ஆதரவு கொடுத்து வேலையும் கொடுக்கிறார் தம்பி ராமய்யா. தங்கையை சுமந்துகொண்டே எல்லா வேலைகளையும் செய்துவரும் அர்ஜுனனை கங்காரு என அழைக்கிறார்கள். முரட்டு மனிதனாகவே வளரும் முருகேசனுக்கு தன் தங்கை ப்ரியங்கா தான் உலகம்.


விலைமகளின் தங்கையானாலும், நல்ல விதத்தில் வளர்ந்து முருகேசனை காதலிக்கும் வர்ஷாவை அர்ஜுனன் கண்டுகொள்வதே இல்லை. வர்ஷாவையும் தனது லிஸ்டில் சேர்த்துவிட துடிக்கும் புரோக்கர் கலாபவன்மணி அர்ஜுனனிடன் செம்ம அடி வாங்குகிறார். உன்னை பழி வாங்காமல் விடமாட்டேன் என சபதம் செய்யும் கலாபவன்மணியின் பார்வை ப்ரியங்கா மீதும் விழுகிறது. என் தங்கச்சி எப்பவும் என் கூடவே தான் இருக்கனும். கல்யாணம் செய்துவைக்கமாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் அர்ஜுனனை தம்பி ராமய்யாவும், வர்ஷாவும் பேசி சமாதானப்படுத்துகிறார்கள்.


வீட்டோடு மாப்பிள்ளையாக தன் தங்கையின் காதலனையே பேசி முடித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய மலையிலிருந்து விழுந்து இறந்துவிடுகிறார் மாப்பிள்ளை. அதேபோல அடுத்த மாப்பிள்ளையும் இறந்துபோக உனக்கு கல்யாணமும் வேண்டாம், நமக்கு இந்த ஊரும் வேண்டாம் என அண்ணனும் தங்கையும் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். அர்ஜுனனின் காதலியான வர்ஷாவோ ‘நீ கல்யாணம் பன்னிகிட்டு போனா தானடி என் வாழ்க்கை ஆரம்பிக்கும்’ என செண்டிமெண்டாக பேசி மீண்டும் ப்ரியங்காவின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.

ஒருவழியாக நடந்து முடிந்த திருமணத்திற்கு பின் மாப்பிள்ளையான சுரேஷ் காமாட்சியை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. ப்ரியங்கா வாழ்க்கையை நாசமாக்க முயல்வது யார்? அர்ஜுனன் என்ன செய்கிறான்? என்பது மீதி கதை.


ஒளிப்பதிவில் அவ்வளவு மெனக்கெடல் இல்லாவிட்டாலும் கண்களை உருத்தாமல் இருப்பது ஆறுதல். ஸ்ரீனிவாஸ் இசையில் பாடல்கள் சிலிர்ப்பு. பின்னணி இசை கடைசி அரைமணி நேரத்தில் களைகட்டுகிறது. 

கலாபவன்மணிக்கு இந்த படம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும். மீண்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க வாழ்த்துக்கள். தம்பி ராமய்யா வழக்கம்போலவே பாட்டு, டான்ஸ், செண்டிமெண்ட் என தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இயக்குனர் சாமியும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். 


குறைவான கதாபாத்திரங்களை வைத்து நிறைவான கதையை தந்திருக்கிறார் சாமி. தம்பி ராமய்யாவும், கலாபவன்மணியும் சிறந்த தேர்வு. முரடனாக காட்டவேண்டும் என்பதற்காக எங்கோ வெறித்தபடியே ஹீரோவை காட்டுவது தான் கொஞ்சம் நெருடல். தங்கையின் மீதுள்ள பாசத்திற்கு காரணத்தை சொல்கிறாரே! படத்தின் முழு வெற்றியும் அங்கு தான் இருக்கிறது. உலகத்திலேயே சிறந்தது அன்பு செலுத்துதல் தான் என்றாலும், அதுகூட அளவுக்கு மீறினால் கொலை செய்யும் அளவிற்கு மனிதனை மாற்றிவிடுகிறது.

கங்காரு - அதீத அன்பு ஆபத்தில் முடியும்! nakkheeran.in

கருத்துகள் இல்லை: