வியாழன், 28 ஜூன், 2012

P.Chidambaram:பாக்., முழு ஆதரவுடன் மும்பை தாக்குதல்

திருவனந்தபுரம்: ""மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அபு ஜுண்டால் அளித்த வாக்குமூலத்தின் மூலம், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உள்ளது தெளிவாக தெரிய வந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று திருவனந்தபுரத்துக்கு வந்தார். அப்போது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி அபு ஜுண்டால் தெரிவித்த வாக்குமூலம் குறித்தும் பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டி:


பாக்.,கிற்கு தொடர்பு: மும்பையில், கடந்த 2008ல் நடந்த, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக, எப்போதும் நாங்கள் கூறி வந்துள்ளோம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள, அபு ஜுண்டால் அளித்த வாக்குமூலம், நாங்கள் கூறியதை உறுதி செய்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது, ஜுண்டால் அளித்த வாக்குமூலத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. இதற்காக, எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பின் மீதும், கை காட்ட விரும்பவில்லை. ஆனால், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உள்ளது என்பது மட்டும் உறுதி. கராச்சியில் கட்டுப்பாட்டு அறையில் இருந்ததாக, ஜுண்டால் வாக்குமூலம் அளித்துள்ளது, அரசு சார்ந்த அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உள்ளதை உறுதி செய்துள்ளது. ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானில் உள்ளனர் என்ற எங்களின் குற்றச்சாட்டை, அந்த நாடு, தொடர்ந்து நிராகரித்து வருகிறது. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில், இந்தியாவின் அணுகுமுறையை உலக நாடுகள் அங்கீகரித்து வரும் நிலையில், பாக்., அரசு மறுத்து வருகிறது.

ரகசியம்: தற்போது கைது செய்யப்பட்டுள்ள அபு ஜுண்டாலின் நடவடிக்கைகளை, கடந்த ஒரு ஆண்டாகவே, இந்தியாவின் விசாரணை அமைப்புகள் கண்காணித்து வந்தன. இந்த தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அபு ஜுண்டால் யார் என்பதும் எங்களுக்கு முன்பே தெரியும். தொடர்ந்து கடும் முயற்சி மேற்கொண்டு, தற்போது ஜுண்டாலை கைது செய்துள்ளோம். ஜுண்டால் குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். ஆனால், நாங்கள் ஏற்கனவே கொடுத்த பட்டியலில் உள்ளவர்களின் குரல் மாதிரிகளை கொடுப்பதாக, அளித்திருந்த வாக்குறுதியை பாகிஸ்தான் அரசு நிறைவேற்ற வேண்டும். ஜுண்டால் விவகாரம் குறித்த விசாரணை தகவல்களை, தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரின் பெயர்களையும், தாக்குதல் நடந்தபோது, கராச்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களையும், ஜுண்டால் அடையாளம் காட்டியுள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாவூத் எங்கே? மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை விரைவில் கண்டறிந்து, கைது செய்ய முடியும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாகவே, நாங்கள் கருதுகிறோம். ஆனால், இதையும் பாக்., அரசு மறுக்கிறது. மும்பை தாக்குதலுக்கு காரணமான அனைத்து நபர்களையும், ஒப்படைக்க வேண்டும் என, பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கைது செய்து, விசாரிக்க வேண்டும் என்பது தான், எங்களின் விருப்பம்.

சரப்ஜித் சிங் குழப்பம்: ஜுண்டால் கைதுக்கும், சரப்ஜித் சிங் விடுதலை தொடர்பாக நிகழ்ந்த குளறுபடிக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை. அங்குள்ள (பாகிஸ்தான்) சில பிரச்னைகளால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், சரப்ஜித் சிங்கை விடுவிக்க வேண்டும் என, பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப் பெரிய தலைவலியாக இருப்பது, இடதுசாரி தீவிரவாதம் தான். 70 சதவீத இடதுசாரி தீவிரவாத வன்முறைகள், நாட்டின் மத்திய பகுதிகளில் உள்ள 26 மாவட்டங்களில் நடந்துள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அரசு உறுதியாக உள்ளது. கேரளா, பயங்கரவாதிகளின் சொர்க்கமாக விளங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. இங்குள்ள ஒரு சில அமைப்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த அமைப்புகள், வரம்பு மீறும்போது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை: